மோகினியாக காட்சி தந்த நம்பெருமாள்..! நாளை சொர்க்கவாசல் திறப்பு..!

By Manikandan S R SFirst Published Jan 5, 2020, 6:00 PM IST
Highlights

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தின் சிகர விழாவான சொர்க்கவாசல் திறப்பு நாளை அதிகாலையில் நடைபெறுகிறது.

திருச்சியில் இருக்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் உலகப்புகழ் பெற்றது. இங்கு மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி அன்று நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பக்தர்களால் கருதப்படுகிறது. மார்கழி மாதத்தில் பெருமாளை நினைத்து ஆண்டாள் பாடிய திருப்பாவையையும் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடி கன்னிப்பெண்கள் விரதம் மேற்கொள்வது ஆதிகாலம் தொட்டு நடந்து வருகிறது.

வைணவர்கள் மட்டுமன்றி சைவப் பெருமக்களும் கடவுளை போற்றி வணங்கும் மாதமாக மார்கழி இருக்கிறது. இந்த மாதத்தில்தான் பெருமாளுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசியும் ஈசனுக்கு உகந்த நாளான திருவாதிரை திருநாளும் வருகிறது. வைணவ ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசி விமர்சையாக கொண்டாடப்படும். இந்த விழா மொத்தம் 21 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதில் முதல் பத்து நாட்கள் பகல் பத்து எனவும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அடுத்த பத்து நாட்கள் இராப்பத்து எனவும் புராணங்களில் கூறப்படுகிறது. 

இந்த வருடத்திற்கான வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கியது. தினமும் விதவிதமான அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று மோகினி அலங்காரத்தில் நாச்சியாராக வலம் வந்த நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு நாளை அதிகாலையில் நடைபெறுகிறது. நாளை காலை 4.45 மணியளவில் பக்தர்கள் புடைசூழ நம்பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வெளிவருவார். இதற்காக ஸ்ரீ ரங்கம் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் கோவிலை சுற்றிலும் குவிக்கப்பட்டுள்னர்.

click me!