காதலை கண்டித்த பெற்றோர்; மனமுடைந்த சகோதரிகள் கிணற்றில் குதித்து தற்கொலை

By Velmurugan sFirst Published Jun 7, 2023, 3:36 PM IST
Highlights

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் அக்கா, தங்கை இருவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த வளநாடு பகுதியைச் சேர்ந்தவர் பிச்சை. கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி. இவர்களுக்கு வித்யா (வயது 23), காயத்ரி (21) என்ற இரு மகள்கள் இருந்தனர். குடும்ப வறுமை காரணமாக மகள்கள் இருவரும் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தங்கியிருந்து பனியன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில் கோவில் திருவிழா காரணமாக இரண்டு மகள்களும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கள் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். அப்போது இருவரும் செல்போனில் அதிக நேரம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த அவரது தாய் இது குறித்து மகள்களிடம் கேட்டுள்ளார். அப்போது மூத்த மகள் வித்யா காங்கேயத்தில் இளைஞர் ஒருவரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். அதே போன்று மற்றொரு மகளான காயத்ரியும் அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு நபரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். 

லெஸ்பியன் மோகத்தால் இளம் பெண்ணுடன் ஓட்டம் பிடித்த குடும்ப பெண்; பரிதவிப்பில் 3 குழந்தைகள்

இதனால் ஆத்திரமடைந்த தாய் அகிலாண்டேஸ்வரி இவருவரது காதலுக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இனி செல்போன் பேசக் கூடாது என்று கண்டித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த இருவரும் நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். வெகு நேரமாகியும் இருவரும் வீட்டிற்கு வரவில்லை. பின்னர் மாலை நேரத்தில் அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றின் அருகில் இரு செல்போன்கள் கிடந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து அவ்வழியாக மாடு மேய்க்க வந்த நபர் ஒருவர் செல்போன்கள் இருப்பதை கண்டு கிணற்றுக்குள் எட்டிப் பார்த்துள்ளார். அப்போது இளம் பெண் ஒருவர் சடலமாக மிதந்துள்ளார். இது தொடர்பாக உடனடியாக அருகில் உள்ள காவல் துறையினருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வந்த காவல் துறையினரும், தீயணைப்பு துறையினரும் கிணற்றில் இருந்து இளம் பெண்ணின் சடலத்தை மீட்டனர்.

மது பழக்கத்தால் குடும்பத்திற்கு பணம் தராத கணவன்; விரக்தியில் பெண் குழந்தையை கொலை செய்த தாய்

மேலும் 2 செல்போன்கள் இருந்ததால் மற்றொரு பெண்ணும் கிணற்றில் விழுந்து இறந்திருக்கலாம் என்ற அடிப்படையில் தீயணைப்பு துறையினர் தேடி பார்த்தனர். அப்போது மற்றொரு இளம் பெண்ணின் சடலமும் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் 2 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் மகள்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாலேயே இரண்டு இளம் பெண்களும் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

click me!