5 நாட்களுக்கு குளிர்விக்க வருகிறது மழை..! வானிலை மையம் அறிவிப்பு..!

By Manikandan S R SFirst Published Apr 24, 2020, 8:56 AM IST
Highlights

தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெப்பநிலை உயர்ந்து வருவதால் வெப்ப சலனம் உருவாகியிருக்கிறது. அதுமட்டுமின்றி கர்நாடகா முதல் தென் தமிழகம் வரை உள்ள வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு(24ம் தேதி முதல் 28ம் தேதி வரை) சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.
 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் நிலையில் கோடை வெயில் ஏற்படுத்திய வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் கோடை மழை குளிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்து வரும் சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மைய அதிகாரி புவியரசன் கூறும்போது, தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெப்பநிலை உயர்ந்து வருவதால் வெப்ப சலனம் உருவாகியிருக்கிறது. அதுமட்டுமின்றி கர்நாடகா முதல் தென் தமிழகம் வரை உள்ள வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு(24ம் தேதி முதல் 28ம் தேதி வரை) சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.

முதல் மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களிலும், 27, 28-ந்தேதி சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும். இறுதி இரண்டு நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் இடி, காற்றுடன் கனமழைக்கான வாய்ப்பும் இருக்கிறது. மாநிலத்தின் பிற இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். எனவே பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 3.30 வரை வெளியிடங்களில் சுற்றித் திரிவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். கடந்த 24மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் சுரளக்கோடு, பேச்சிப்பாறை, லோவர் கோதையார் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!