ஊரடங்கு நேரத்திலும் துணிச்சல்..! வீட்டைவிட்டு வெளியேறி காதலனை கரம் பிடித்த கல்லூரி மாணவி..!

By Manikandan S R SFirst Published Apr 20, 2020, 2:51 PM IST
Highlights

ஊரடங்கு அமலில் இருக்கும் வேளையிலும் வீட்டை விட்டு வெளியேறி இளம்பெண் ஒருவர் காதலனை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் வினோத்(25). ஐடிஐ படித்து உள்ள இவர் திருச்சியில் இருக்கும் வாகனங்களுக்கு பாடி கட்டும் பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.இவருக்கு திருச்சி ஜீவா நகரைச் சேர்ந்த ஜீவிதா(20) என்கிற இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜீவிதா திருச்சியில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் இறுதியாண்டு படித்து வருகிறார். நண்பர்களாக பழகிய இருவரும் நாளடைவில் காதலிக்க தொடங்கி இருக்கின்றனர். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் ஜீவிதாவின் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரிய வந்திருக்கிறது. வினோத் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் ஜீவிதாவின் பெற்றோர் அவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கவும் முடிவெடுத்து இருக்கின்றனர். ஆனால் ஜீவிதா விடாப்பிடியாக வினோத்தை திருமணம் செய்யும் முடிவில் இருந்திருக்கிறார். இதனிடையே தற்போது கொரோனா பரவுதல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கல்லூரி விடுமுறை விடப்பட்டு ஜீவிதா வீட்டில் இருந்தார். வினோத்தின் பட்டறையும் விடுமுறையில் இருக்கிறது. வினோத்தை கரம் பிடிப்பதில் உறுதியாக இருந்த ஜீவிதா நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறினார்.

காதலனை சந்தித்த அவர் சிந்தாமணியில் இருக்கும் ஒரு கோவிலில் வைத்து அவரை திருமணம் செய்து கொண்டார். வினோத்தின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டு எளிமையாக திருமணம் நிகழ்ந்துள்ளது. மகளுக்கு திருமணம் நடந்தது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்த ஜீவிதாவின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்படி இருதரப்பினரையும் காவல் நிலையம் வரவழைத்து திருச்சி இன்ஸ்பெக்டர் சண்முகவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஜீவிதா தனது காதல் கணவருடன் தான் செல்வேன் என்றும் பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை எனவும் தெரிவித்தார். அவர் மேஜர் என்பதால் அவரது விருப்பப்படியே போலிசார் காதலனுடன் அனுப்பி வைத்தனர். ஊரடங்கு அமலில் இருக்கும் வேளையிலும் வீட்டை விட்டு வெளியேறி இளம்பெண் ஒருவர் காதலனை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

click me!