அரசின் அதிரடியால் அலறும் தனியார் பேருந்துகள்..! கட்டண உயர்வுக்கு செக்..!

By Manikandan S R SFirst Published Jan 11, 2020, 12:59 PM IST
Highlights

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை இயக்கப்பட உள்ள ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் 18004256151 என்ற தமிழக அரசின் கட்டணமில்லா தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கலாம்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உலகெங்கும் வாழும் தமிழர்களால் வரும் 14 ம் தேதி முதல் கோலாகலமாக தொடங்க இருக்கிறது. 14ம் தேதி போகி பண்டிகையும், 15ம் தேதி தை பொங்கலும், 16 ம் தேதி மாட்டுபொங்கலும் கொண்டாடப்பட இருக்கிறது. பண்டிகையை குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாட சென்னை, கோவை போன்ற வெளி நகரங்களில் வசிக்கும் மக்கள் ஊருக்கு கிளம்பி செல்வார்கள். அதற்காக அரசு சார்பாக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படும். தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்களும் நிறைய பேருந்துகளை இயக்கும். 

பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகளின் போது தனியார் பேருந்துகளில் கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப்படுவது வழக்கமாக இருக்கிறது.இதை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதும் கட்டணத்தை தனியார் பேருந்து நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். இந்தநிலையில் தனியார் பேருந்துகளில் வரைமுறை மீறி கட்டணம் வசூலிக்கப்பட்டால் மக்கள் புகார் அளிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை இயக்கப்பட உள்ள ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் 18004256151 என்ற தமிழக அரசின் கட்டணமில்லா தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கலாம்.

2.12.2019 முதல் 8.1.2020 வரை தமிழகம் முழுவதும் வாகன சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டு 22,295 வாகனங்களுக்கு அபராதம் மற்றும் வரியாக ரூ.8.33 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் சிரமமின்றி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள ஆம்னி பஸ்களில் ஆய்வு மேற்கொள்ள சிறப்பு தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது என அரசு கூறியிருக்கிறது.

click me!