தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதி கவிழ்ந்த தனியார் பேருந்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்..!

By Manikandan S R SFirst Published Sep 26, 2019, 12:25 PM IST
Highlights

திருச்சி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த பயணிகள் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

புதுக்கோட்டையில் இருந்து துவரங்குறிச்சி நோக்கி தனியார் பேருந்து ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 20 பயணிகளுக்கு மேல் பயணித்தனர். பேருந்தை திருச்சியைச் சேர்ந்த யுவராஜ்(24)  என்கிற வாலிபர் ஓட்டி வந்தார்.

மணப்பாறையை அடுத்த ஆண்டிபட்டி அருகே பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக சென்றது. சாலையின் நடுவே இருக்கும் தடுப்பு சுவரில் மோதிய பேருந்து நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 20 பயணிகள் பலத்த காயமடைந்தனர். அந்த பகுதியாக சென்றவர்கள் உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பொதுமக்கள் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு மணப்பாறை காவல்துறையினர் விரைந்து வந்தனர். காயமடைந்த பயணிகளை  மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு காவல்துறை அறிவித்தது. அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பேருந்து ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!