பிராத்தனைகளோடு நம்பிக்கையா இருங்க..! சுஜித் மீண்டு வருவான்..!

By Manikandan S R SFirst Published Oct 26, 2019, 4:12 PM IST
Highlights

குழந்தை சுஜித்தை இன்னும் அரை மணி நேரத்தில் மீட்டு விடலாம் என்று தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீண்டும் நம்பிக்கை தெரிவித்துள்னர். இதனிடையே தமிழகம் முழுவதும் குழந்தைக்காக பிராத்தனைகள் நடந்து வருகின்றன.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ. இவரது மனைவி கலாமேரி. இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் சுஜித் என்கிற மகன் இருக்கிறான். நேற்று மாலை வீட்டின் அருகே இருக்கும் ஆழ்துளைக்கிணற்றில் குழந்தை சுஜித் தவறி விழுந்துள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த மீட்பு படையினர் குழந்தையை மீட்க தீவிரமாக போராடி வந்தனர். இரவு தொடங்கிய இந்த பணி 22 மணி நேரம் கடந்தும் தீவிரமாக நடந்து வருகிறது. முதலில் 30 அடி ஆழத்தில் இருந்த குழந்தை பின்னர் 70 அடிக்கு சென்று விட்டதாக தகவல் வந்திருக்கிறது.  எனினும் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் மீட்பு படையினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். காலை 5 மணி வரையிலும் குழந்தையின் அழுகுரல் கேட்டதாகவும் அதன் பின்னர் சத்தம் எதுவும் வரவில்லை என்று அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்திருந்தார்.

குழந்தையை பத்திரமாக மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்னர். ஏற்கனவே இதுபோன்ற நிகழ்வுகளில் அவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால் குழந்தையை எளிதில் மீட்க வாய்ப்பிருக்கிறது. இந்த நிலையில் குழந்தை சுஜித்தை அரைமணி நேரத்தில் மீட்டு விடலாம் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே குழந்தை சுஜித் மீண்டும் அவனது பெற்றோருடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பிராத்தனைகள் நடைபெற்று வருகின்றன. மதுரையில் இருக்கும் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் ஒன்று கூடி பிராத்தனை செய்தனர். கோவில்கள், சர்ச் மற்றும் பள்ளிவாசல்களிலும் குழந்தைக்காக மக்கள் வேண்டி வருகின்றனர்.அனைவரது பிராத்தனைகளும் நிறைவேறும் வண்ணம் நிச்சயம் குழந்தை சுஜித் உயிருடன் மீட்கப்பட்டு விடுவான். இப்போதைக்கு நாம் அனைவரும் இருக்குமிடங்களிலேயே குழந்தைக்காக இறைவனை வேண்டுவது தான் நம்மால் செய்ய முடிந்த உதவியாக அமையும்.

click me!