சவாலை உண்டாக்கியிருக்கும் கடினமான பாறைகள்..! மீட்பு பணிகளில் மேலும் தாமதம்..!

By Manikandan S R SFirst Published Oct 28, 2019, 8:09 AM IST
Highlights

முதலில் கொண்டுவரப்பட்ட ரிக் இயந்திரம் பழுதானதை தொடர்ந்து அதி நவீன வசதிகளுடன் மீண்டும் ஒரு இயந்திரம் கொண்டுவரப்பட்டது. இது மும்மடங்கு வசதிகள் கொண்டது என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர் . இதனால் குழந்தை விரைவில் மீட்கப்படுவான் என்று அனைவரும் நம்பிக்கையோடு காத்திருந்தனர். இந்த நிலையில் கடினமான பாறைகளால் அதனுடைய நுனி பகுதிகளும் சேதாரமாகி மீட்பு பணியில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

திருச்சி அருகே இருக்கும் மணப்பாறையில் இரண்டு வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று முன்தினம் மாலை 5.40 மணியளவில் விழுந்த குழந்தையை இன்னும் மீட்க முடியாமல் மீட்பு படையினர் போராடி வருகின்றனர். ஆழ்துளைக்கிணற்றில் குழந்தைகள் விழுந்தால் மீட்பதற்காக கருவிகளை கண்டுபிடித்திருக்கும் வல்லுனர்களும் வரவழைக்கப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. 

முதலில் 30 அடி ஆழத்தில் இருந்த குழந்தை  70 , 80 அடி வரையில் சென்று தற்போது 87 அடியில் சிக்கியிருக்கிறது. தேசிய மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. பலகட்ட முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் ஆழ்துறை கிணறு அருகே  மற்றொரு குழி தோண்டி, தீயணைப்பு வீரர்கள் மூன்று பேர் அதனுள்ளே சென்று குழந்தை சுர்ஜித்தை மீட்டு வர முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, ஆழ்துளை கிணறுக்கு அருகில் 3 மீட்டர் தொலைவில் 1 மீட்டர் அகலம், 90 அடி ஆழத்தில் ரிக் இயந்திரம் மூலமாக குழி தோண்டப்பட்டு வந்தது. 

குழி தோண்டப்படும் பகுதியில் அதிகமான பாறைகள் இருப்பதால் பெரிய அளவில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. முதலில் கொண்டுவரப்பட்ட ரிக் இயந்திரம் பழுதானதை தொடர்ந்து அதி நவீன வசதிகளுடன் மீண்டும் ஒரு இயந்திரம் கொண்டுவரப்பட்டது. இது மும்மடங்கு வசதிகள் கொண்டது என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர் . இதனால் குழந்தை விரைவில் மீட்கப்படுவான் என்று அனைவரும் நம்பிக்கையோடு காத்திருந்தனர். இந்த நிலையில் கடினமான பாறைகளால் அதனுடைய நுனி பகுதிகளும் சேதாரமாகி மீட்பு பணியில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் அது சரி செய்யப்பட்டு மீட்பணிகள் தொடர்ந்து தொய்வின்றி நடந்து வருகிறது.

62  மணி நேரமாக குழந்தை சுஜித்தை மீட்க நடக்கும் போராட்டம் எந்த வித பின்னடைவும் வெற்றிகரமானதாக அமைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் இருந்து வருகிறது. குழந்தை பத்திரமாக வெளியே வரவேண்டும் என்று தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிராத்தனைகள் நடந்து வருகின்றன. சமூக வலைத்தளங்களில் Save Sujith, Pray for sujith ஹஸ்டேக்களும் பரபரப்பட்டு வருகிறது.

click me!