ஆழ்துளை கிணற்றுக்குள் ஒன்றரை நாளாக சுர்ஜித்... இறுதி கட்டமாக நம்பிக்கையுடன் தொடரும் பணி!

By Asianet TamilFirst Published Oct 27, 2019, 6:41 AM IST
Highlights

குழந்தை விழுந்த ஆழ்துறை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழியைத் தோண்டி குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதற்காக சுரங்கம் தோண்ட பயன்படுத்தப்படும் ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் அனுப்பப்பட்டது. ஆனால், 96 டன் எடையுள்ள வந்த இயந்திரத்தை ஏற்றிவந்த வாகனம் நடுவழியில் பழுதானது. மேலும் தீபாவளி போக்குவரத்து நெரிசல் காரணமாகவும் அந்த இயந்திரம் மணப்பாறைக்கு வர கால தாமதமானது. 

ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை சுர்ஜித் விழுந்து ஒன்றரை நாள் கடந்துவிட்ட நிலையில், இறுதிகட்டமாக ரிக் இயந்திரத்தை வைத்து மண்ணை தோண்டும் பணி நம்பிக்கையுடன் தொடங்கப்பட உள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் தன்னுடைய வீட்டு தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித், கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றுக்குள் நேற்று முன் தினம் மாலை 5.30 மணியளவில் தவறி விழுந்தான். முதலில் 26 அடியில் சிக்கியிருந்த குழந்தை, பின்னர் 80 அடி ஆழத்துக்கு சரிந்தான். தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்க துரித கதியில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், 37 மணி நேரம் கடந்துவிட்ட நிலையிலும் எந்த ஒரு முயற்சியும் கைகூடவில்லை.


சோறு தண்ணி இல்லாமல், சரியான சுவாசம் இல்லாமல் ஒன்றை நாட்களாக ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருக்கும் குழந்தையின் நிலை என்னவென்று தெரியவில்லை. குழந்தையின் சப்தம் கேட்கவில்லை என்று நேற்று மாலையே அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
குழந்தை விழுந்த ஆழ்துறை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழியைத் தோண்டி குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதற்காக சுரங்கம் தோண்ட பயன்படுத்தப்படும் ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் அனுப்பப்பட்டது. ஆனால், 96 டன் எடையுள்ள வந்த இயந்திரத்தை ஏற்றிவந்த வாகனம் நடுவழியில் பழுதானது. மேலும் தீபாவளி போக்குவரத்து நெரிசல் காரணமாகவும் அந்த இயந்திரம் மணப்பாறைக்கு வர கால தாமதமானது. தற்போது இயந்திரம் வந்துவிட்ட நிலையில் தற்போது அந்த இயந்திரத்தை நிலை நிறுத்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.


இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன் ரிக் இயந்திரம் குழியை தோண்டும் பணியை தொடங்கும். ஆழ்துளை கிணறுக்கு அருகில் 3 மீட்டர் தொலைவில் 1 மீட்டர் அகலம், 90 அடி ஆழத்தில் இந்தக்குழி தோண்டப்படும். குழி தோண்ட 3 மணி நேரம் பிடிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே அதன் பிறகே குழந்தையின் நிலை தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!