நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் பாஜகவுக்கு வெடியாக இருக்க வேண்டும் - கனிமொழி கர்ஜனை

By Velmurugan sFirst Published Mar 23, 2024, 11:52 AM IST
Highlights

பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பாஜகவுக்கு வெடியாக இருக்க வேண்டும் என தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் தண்டுபத்து ஊராட்சியில் நடைபெற்றது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற  இந்த கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கனிமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் பேசிய கனிமொழி, நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். சென்ற முறை இங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்ட போது கனிமொழி மறுபடியும் வெற்றி பெற்றபிறகு தூத்துக்குடிக்கு வருவாரா என்று விமர்சனங்களை வைத்தார்கள். ஆனால் இன்று எனது இரண்டாவது தாய்வீடு தூத்துக்குடி என்று சொல்லக்கூடிய அளவிற்கு இந்த மக்களோடும், இந்த மண்ணோடும் கலந்து இருக்கக்கூடிய அந்த உணர்வை பெற்றிருக்கிறேன். தொடர்ந்து உங்களுடைய அன்பு, பாசம் என்பது என்னால் என்றென்றும் மறக்கமுடியாத ஒன்றாகத் தொடர்ந்து நீடிக்கும். அதனால் தான் மறுபடியும் உங்களோடு பணியாற்ற உங்களில் ஒருவளாக, உங்களோடு நிற்கக் கூடிய வாய்ப்பை கேட்டுப் பெற்று இங்கே வந்திருக்கிறேன். 

 தேர்தல் நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாரத்திற்கு 3, 4 நாள் தமிழ்நாட்டுக்கு வருகிறார். ஆனால் இதுவரை தமிழ்நாடு சந்தித்து இருக்கக்கூடிய ஏதாவது பேரிடர் நேரத்தில் உதவிக்கரம் நீட்டுவதற்கு, மக்களுடைய துயரைத் துடைப்பதற்கு மக்களோடு நின்று பணியாற்றுவதற்கு வந்திருக்கிறாரா? வந்ததில்லை. அமைச்சர்களை அனுப்பினார். தூத்துக்குடி மக்கள் வீடுகளை இழந்திருக்கிறார்கள், வயல் வெளிகள் எல்லாம் அடித்துச் செல்லக்கூடிய அளவுக்கு மழை. ஆடு, மாடு, நம்முடைய மீனவ தோழர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படக்கூடிய நிலை என்று பாதிக்கப்படாதவர்கள் யாரும் இல்லை. வியாபாரிகள் சிறு குறு தொழில் செய்யக்கூடியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டார்கள். ஒன்றிய அரசாங்கம் இன்று வரைக்கும் ஒரு ரூபாய் கொடுத்து இருக்கிறார்களா? கொடுக்கவில்லை.

Annamalai: கோவையில் முதல்வரே வந்து உட்கார்ந்தாலும் கோவையில் வெற்றி பெறுவது நாங்கள் தான் - அண்ணாமலை சவால்!!

நிதி அமைச்சர், அவர்களிடம் போய் பிச்சை எடுப்பதுபோல நம்மை அவ்வளவு தரக்குறைவாகப் பேசுகிறார். இப்படிப்பட்ட ஒருவர் தொடர்ந்து தமிழ்நாட்டை இழிவுபடுத்துவதற்குத் தமிழர்களை கர்நாடகாவில் ஒரு பாஜக அமைச்சர் ஏதோ கர்நாடகாவில் குண்டு போடுவதற்கும், அங்கே தீவிரவாதத்தை விதைப்பதற்குத் தான் அங்கே தமிழர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய ஒரு தொனியில் பேசுகிறார். அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள்? எதுவும் கிடையாது. ஏனென்றால், மக்களை பிரித்து மக்களுக்கு இடையே பிரச்சனைகள் குழப்பங்கள் வெறுப்பு இதைத்தான் அவர்கள் விதைத்து அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். 

அண்ணன் பொன்முடி அவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்ய மாட்டேன்னு ஏதோ உலகத்தில் உள்ள அனைத்து சட்டங்களையும் கரைத்துக் குடித்தவர் மாதிரி பேசிக் கொண்டு இருக்கிறார். உச்சநீதிமன்றம் அழைத்து ஒரு மிரட்டல் போட்டதும், இன்றைக்கு இருக்கிற இடம் தெரியாமல் பதவிப் பிரமாணத்தைச் செய்துவிட்டு அடங்கி கிடக்கிறார். இப்படி ஒன்றொன்றுக்கும் வழக்காடு மன்றத்தை நாடித்தான் தமிழ்நாடு நியாயம் பெறவேண்டும் என்ற ஒரு நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். 

பாஜகவுக்கு எதிராக கேள்வி கேட்பவர்கள் மீது வழக்கு பதிவது, அவர்களை சிறையில் அடைப்பது உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர். தேர்தலுக்கு பணம் செலவு செய்ய முடியாத வகையில் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அவர்களை பார்த்து நாம் பயப்பட வேண்டும் என்று நினைக்கின்றனர்.

சிதம்பரம் தொகுதியில் திருமாவை எதிர்த்து களமிறங்கும் பாஜக வேட்பாளர்.. யார் இந்த கார்த்தியாயினி?

எப்ப பார்த்தாலும் பயம், அவர்களைப் பார்த்து நம்ம பயப்படவேண்டும் ஆசைப்படுறாங்க நீங்க என்ன சிறைக்கு அனுப்பினால் என்ன பண்ணாலும் இந்த நாட்டு மக்கள் இனிமேல் உங்களுக்கு பயப்படுவதாக இல்லை, என்ன வந்தாலும் பார்த்துருவோம். எப்படி விவசாயிகள் தலை நிமிர நினைக்கிறார்களோ இங்கே இருக்கக்கூடிய ஒவ்வொரு மனிதனும் இந்த நாட்டில் எதிர்க்கத் தயாராகிவிட்டார்கள். வீட்டுக்கு போறதுக்கு பேக் பண்ண ஆரம்பிச்சிட்டிங்க. ஏனென்றால் விரைவிலே வீட்டுக்கு அனுப்பப் பட்டவர்கள் அனுப்பப்படுவீர்கள். 

இங்கே பேசும்போது குறிப்பிட்டார்கள், நீங்கள் போடுகிற ஒவ்வொரு ஓட்டும் பாஜகவிற்குப் போடக்கூடிய வெடி என்பதை நினைவில் வைத்துக் கொண்டு இந்த தேர்தலில் களப்பணி ஆற்ற வேண்டும். வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வந்து வாக்கு அளிப்பதாக இருக்கட்டும், அது நம் ஒவ்வொருவருடைய கடமை என்பதை உணர்ந்து கொண்டு நாம் பணியாற்ற வேண்டும். இந்த நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றால் தமிழ் நாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற இந்த மண்ணிலே ஒரு இடத்தில்கூட பாஜக என்பதை இரண்டாவது இடத்தில் கூட வந்துவிடக் கூடாது என்பதை மனதில் வைத்துக் கொண்டு நாம் தேர்தலிலே பணியாற்ற வேண்டும்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

click me!