சற்றுநேரத்தில் மகா தீபம்..! விழாக்கோலத்தில் திருவண்ணாமலை..!

By Manikandan S R SFirst Published Dec 10, 2019, 5:45 PM IST
Highlights

திருவண்ணாமலை மலை உச்சியில் சற்று நேரத்தில் மகா தீபம் ஏற்றப்பட இருக்கிறது.

பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில். உலகப்பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு தினமும் பெருமளவில் பக்தர்கள் வருகை தருவார்கள். கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த 1 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

10 நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கார்த்திகை தீபத்திருநாள் இன்று நடக்கிறது. மாலை 6 மணியளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதை காண்பதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டுள்ளனர். தற்போது பஞ்சமூர்த்திகள் சன்னதியில் இருந்து வெளி வந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.

சரியாக 5.55 மணியளவில் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்தக்கூத்தாடியபடி பக்தர்களுக்கு காட்சி தருவார். அதைத்தொடர்ந்து அகண்ட தீபம் ஏற்றப்படும். அப்போது அதே நேரத்தில் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். அதைத்தொடர்ந்து திருவண்ணாமலையில் இருக்கும் மக்கள் தங்கள் வீடுகள், அலுவலகங்கள் முதலான இடஙக்ளில் தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்வார்கள். இன்னும் சற்று நேரத்தில் மகா தீபம் ஏற்றப்பட இருப்பதால் பக்தர்கள் திருவண்ணாமலையில் பரவசத்தில் உள்ளனர். 

click me!