மின்னொளியில் ஜொலிக்கும் அருணாசலேஸ்வரர் கோயில் கோபுரங்கள்... நாளை கொடியேற்றம்... டிசம்பர் 10-ம் தேதி மகாதீபம்..!

By vinoth kumarFirst Published Nov 30, 2019, 5:57 PM IST
Highlights

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வருடம்தோறும் 10 நாட்கள் கார்த்திகை தீபத் திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை அதிகாலை 5.30 மணிக்கு மேல் 7.05 மணிக்குள் அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி முன்பு உள்ள 61 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. விழாவை முன்னிட்டு தினமும் காலை வேளைகளில் விநாயகா், ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலாவும், இரவு வேளைகளில் பஞ்சமூா்த்திகள் வீதியுலாவும் நடைபெறுகிறது. 

விழாவின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை (டிச.1) காலை வெள்ளி விமானங்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும், இரவு 8 மணிக்கு மூஷிக வாகனத்தில் விநாயகா், மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் அருணாசலேஸ்வரா், ஹம்ச வாகனத்தில் பராசக்தியம்மன், சிம்ம வாகனத்தில் சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 

வெள்ளித் தேரோட்டம் டிசம்பா் 6-ம் தேதி இரவு நடைபெறுகிறது. டிசம்பர் 7-ம் தேதி பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறுகிறது. காலை 7.05 மணிக்கு மேல் 8.05 மணிக்குள் விநாயகர் தேரோட்டம் தொடங்குகிறது. தொடா்ந்து, முருகர் தேர், அருணாசலேஸ்வரர் தேர், பராசக்தியம்மன் தேர், சண்டிகேஸ்வரா் தேர் என பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறுகிறது. 

விழாவின் முக்கிய நிகழ்வான தீபத் திருவிழா டிசம்பர் 10-ம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலினுள் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயரமலையில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது.  விழாவுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து செய்து வருகின்றனர்.

click me!