நாளை முதல் முழு அடைப்பு..! திருவண்ணாமலை ஆட்சியர் அதிரடி..!

By Manikandan S R SFirst Published Apr 13, 2020, 3:23 PM IST
Highlights

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இருக்கும் காய்கறி, மளிகை மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும் நாளை முதல் தற்காலிகமாக மூடப்படுவதாகவும் அதற்கு மாற்றாக அனைத்து பகுதிகளிலும் தள்ளு வண்டிகள் மூலம் அவற்றை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பதாக ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 106 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு தனிமை சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் நேரடி கண்காணிப்பில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை முதல் அனைத்து கடைகளும் தற்காலிகமாக மூடப்படுவதாக ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட கலெக்டர் கந்தசாமி பேசும்போது, திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இருக்கும் காய்கறி, மளிகை மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும் நாளை முதல் தற்காலிகமாக மூடப்படுவதாகவும் அதற்கு மாற்றாக அனைத்து பகுதிகளிலும் தள்ளு வண்டிகள் மூலம் அவற்றை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்தார். அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளும் மூடப்படுவதாக தெரிவித்திருக்கும் ஆட்சியர், அவற்றை விற்பனை செய்யும் கடை ஊழியர்கள் ஆர்டரின் பேரில் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று பொருட்களை விநியோகம் செய்ய உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள், ஏடிஎம்கள், எரிவாயு முகவர்கள், இறைச்சி கடைகள் போன்றவை ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் உத்தரவின்படி செயல்படும் என கூறியிருக்கிறார். இவற்றை பொது மக்கள், வணிகர்கள் வியாபாரிகள் என அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கோரிக்கை விடுத்திருக்கிறார். திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!