குடிபோதையில் நிற்காமல் சென்ற லாரி.. துரத்தி பிடிக்க முயன்ற காவலர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழப்பு..!

By vinoth kumarFirst Published Jul 1, 2020, 1:12 PM IST
Highlights

திருப்பூரில் வாகன சோதனையின்போது லாரி மோதி ஆயுதப்படை போலீசார் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

திருப்பூரில் வாகன சோதனையின்போது லாரி மோதி ஆயுதப்படை போலீசார் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

திருப்பூர் மாவட்டம் உடுமலை குடிமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரபு (25). மாவட்ட ஆயுதப் படையில் காவலராகப் பணியாற்றி வந்த இவர், காங்கயம் காவல் நிலைய பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு திட்டுப்பாறை சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, நொய்யல் சோதனைச் சாவடி வழியாக வந்த கன்டெய்னர் லாரி, தடுப்புகள் மற்றும் கார் மீது மோதிவிட்டு காங்கயம் சாலையில் வந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, திட்டுப்பாறை சோதனைச் சாவடியில் தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த கம்பிகள் மீதும் மோதிவிட்டு அங்கேயும் நிற்காமல் வேகமாக சென்றது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருப்பூர் ஆயுதப்படை போலீஸ்காரரான பிரபு தனது  இருசக்கர வாகனத்தில் அந்த லாரியை துரத்தி சென்றார். பின்னர் ஆயுதப்படை போலீஸ்காரர் வேகமாக சென்று சாவடி பேருந்து நிறுத்தம் அருகே அந்த லாரியை முந்தி செல்ல முயன்றார்.

அப்போது,  எதிர்பாராதவிதமாக லாரி மோதியதில் உடல் நசுங்கி பிரபு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். ஆனாலும், அந்த லாரி நிற்காமல் சென்றதால் உயிரிழந்த பிரபுவின் உடலையும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு இழுத்து கொண்டு சென்றது. இதுதொடர்பாக அனைத்து காவல் நிலையத்திற்கும் வயர்லெஸ் மூலம்  தகவல் தெரிவிக்கப்பட்டது. 

பின்னர், ஓடாநிலை பேருந்து நிறுத்தம் அருகில் அந்த லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாஸ்கரன் (40) என தெரியவந்தது. மேலும் இவர் குடிபோதையில் இருந்ததால் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!