குட் நியூஸ்: கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்ட 3வது மாவட்டம்.. கொரோனாவை விரட்டப்போகும் அடுத்த மாவட்டம் அதுதான்

By karthikeyan VFirst Published May 11, 2020, 8:02 PM IST
Highlights

தமிழ்நாட்டில் கொரோனாவிலிருந்து மூன்றாவது மாவட்டம் முழுமையாக மீண்டுள்ளது. 
 

தமிழ்நாட்டில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 8002ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 538 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு சென்னையில் 4371ஆக அதிகரித்துள்ளது. 

கோயம்பேடு சந்தையை மையமாக கொண்டு தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்துவருகிறது. குறிப்பாக திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம் ஆகிய வடமாவட்டங்களில் பாதிப்பு மளமளவென உயர்ந்துவருகிறது. அரியலூரிலும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இன்று ஒரே நாளில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக 90 பேர் செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வடமாவட்டங்களை கொரோனா வாட்டி வதைத்துவரும் நிலையில், கொங்கு மாவட்டங்கள் கொரோனாவின் கொட்டத்தை அடக்கியுள்ளன. கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் உறுதியான ஆரம்பக்கட்டத்தில் அதிகமான பாதிப்பை சந்தித்த ஈரோடு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 70 பேரில் ஒருவர் மட்டுமே உயிரிழந்தார். மற்ற 69 பேரும் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக ஈரோட்டில் புதிய பாதிப்பு ஏதுமில்லை. எனவே ஈரோடு கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்டு  பச்சை மண்டலத்திற்கு மாறியுள்ளது. 

அதேபோல, சிவகங்கை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டிருந்த 12 பேரும் குணமடைந்து வீடு திரும்பியதால் சிவகங்கை மாவட்டமும் கொரோனாவிலிருந்து மீண்ட மாவட்டமாக திகழும் நிலையில், திருப்பூர் மாவட்டமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. 

தூத்துக்குடி, தேனி, நீலகிரி, கரூர் ஆகிய மாவட்டங்களும் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனாவிலிருந்து மீண்டன. ஆனால் அங்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதியானது. ஆனால் ஈரோடு மற்றும் சிவகங்கையில் பாதிக்கப்பட்டோர் குணமடைந்த பின்னர் புதிய பாதிப்பு உறுதியாகவில்லை. 

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 114 பேருமே பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்ட மூன்றாவது மாவட்டமாக திருப்பூர் திகழ்கிறது. கோவை மாவட்டத்திலும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக புதிய பாதிப்பு ஏதும் உறுதியாகவில்லை. எனவே கோவையில் பாதிப்பு எண்ணிக்கை 146ஆக உள்ளது. அங்கு சிகிச்சை பெற்றுவரும் எஞ்சியவர்களும் டிஸ்சார்ஜ் ஆனால், கொரோனாவிலிருந்து மீண்ட மாவட்டங்கள் பட்டியலில் கோவையும் இணையும். அடுத்ததாக கோவை தான் இந்த பட்டியலில் இணையும். ஏனெனில் கடந்த 10-15 நாட்களாக கோவையில் ஒரு புதிய தொற்று கூட உறுதியாகவில்லை. 
 

click me!