திருப்பூரில் சோகம்... மகளிடம் இறுதி சடங்குக்கு பணம் கொடுத்துவிட்டு உயிரிழந்த குடும்பத்தினர்...!

By vinoth kumarFirst Published Jul 16, 2019, 4:26 PM IST
Highlights

திருப்பூரில் இறுதி சடங்குக்கு பணம் கொடுத்து விட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் இறுதி சடங்குக்கு பணம் கொடுத்து விட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே உள்ள சின்னகாளிபாளையம் பகுதியில் வசித்து வந்தவர் துரைராஜ் (70). இவருக்கு செல்வி (42), சாந்தி என 2 மகளும், கோபாலகிருஷ்ணன் (37) என்ற மகனும் உள்ளனர். மகள் செல்விக்கு சிவக்குமார் என்பவருடன் திருமணம் நடந்து ரகுநாதன் (22) என்ற மகன் இருந்தார். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செல்வி தனது மகனுடன் தந்தை வீட்டிலே வசித்து வந்தார். கடந்த ஆண்டு செல்வியின் மகன் ரகுநாதன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் 37 வயது ஆகியும் கோபாலகிருஷ்ணனுக்கு திருமணம் ஆகாததால் மிகுந்த கவலையில் இருந்து வந்தார். இதனால், குடும்பமே மனஅழுத்தத்தில் இருந்து வந்தனர். 

இந்நிலையில், திடீரென தங்கை சாந்தியின் வீட்டிற்குச் சென்ற கோபால கிருஷ்ணன் இவரிடம் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். சாந்தி பணம் எதற்கு என காரணம் கேட்டதற்கு அவசர செலவுக்காக இந்த பணம் உனக்கு தேவைப்படும் என்றார். மேலும், சொத்து பத்திரம் குறித்து கேட்ட போது எங்கள் வீட்டில் பாதுகாப்பு இல்லை. அதனால் நீ வைத்து கொள் என கூறிவிட்டு வீடு திரும்பினார். 

பின்னர், வெகுநேரமாகியும் வீட்டை விட்டு யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் கோபாலகிருஷ்ணனும், அவரின் தந்தை துரைராஜும், மூத்த மகள் செல்வியும் இருந்துள்ளனர். தந்தையும் மகனும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சாந்தி இறுதி சடங்கிற்காக தான் பணத்தை கொடுத்தீர்களா என கூறி கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

click me!