
Young man pushes pregnant woman off moving train: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் கடந்த பிப்ரவரி மாதம் மருத்துவ பரிசோதனைக்காக சொந்த ஊருக்கு செல்வதற்காக கோவையில் இருந்து திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப்பெட்டியில் பயணம் செய்தார்.
கர்ப்பிணியை கீழே தள்ளிய கொடூரன்
அந்த ரயில் குடியாத்தம்- கே.வி.குப்பம் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது அந்த இளம்பெண் கழிவறைக்கு சென்றார். அப்போது கழிவறை அருகே அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிட்டப்போது மற்ற பயணிகள் ஓடி வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர் இளம்பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டு மற்ற பெட்டிகளுக்கு தப்பிச் சென்றார்.
கர்ப்பிணிக்கு தீவிர சிகிச்சை
கர்ப்பிணி கீழே விழுந்ததை பார்த்த மற்ற பயணிகள் உடனடியாக ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கர்ப்பிணியை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கை, காலில் எலும்பு முறிவு மற்றும் தலையில் படுகாயம் அடைந்த கர்ப்பிணிக்கு மருத்துவமனையில் தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டது.
கொடூரன் ஹேமராஜ் கைது
இதற்கிடையே கர்ப்பிணியை ரயில் இருந்து தள்ளிய வேலூர் மாவட்டம் பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் (30) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கை திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் கொடூரன் ஹேமராஜ் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.
சாகும் வரை சிறை
இந்நிலையில், இந்த வழக்கில் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டன. அதன்படி தண்டனை விவரத்தை அறிவித்த நீதிபதி மீனாகுமாரி கர்ப்பிணியை கீழே தள்ளிய குற்றவாளிக்கு ஹேமராஜுக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன். சாகும் வரை சிறை தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் தமிழ்நாடு அரசு ரூ.50 லட்சம், ரயில்வே துறை ரூ.50 லட்சம் என மொத்தமாக ரூ.1 கோடி அந்த கர்ப்பிணிக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.