Latest Videos

நெல்லையில் சாதிமறுப்பு திருமணத்தை நடத்தி வைத்த கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூறையாடிய பெண் வீட்டார்

By Velmurugan sFirst Published Jun 14, 2024, 9:11 PM IST
Highlights

சாதி மறுப்பு திருமணத்தை நடத்தி வைத்த காரணத்திற்காக இன்று பெண் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த காதல் ஜோடி ஒன்று கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே திருமணம் செய்துகொள்ளும் முடிவில் தீர்க்கமாக இருந்த காதல் ஜோடி தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தை நாடி உள்ளது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள லெனின் சிலை முன்பாக காதல் ஜோடிக்கு சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்த பெண் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் திடீரென இன்று மாலை நேரத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு கூட்டமாக வந்த பெண் வீட்டார் தங்கள் வீட்டு பெண்ணை தங்களுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர். இதனால் அங்கு கூடி இருந்தவர்களுக்கும், பெண் வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இரு தரப்புக்கும் கைகளப்பு ஏற்படவே ஆத்திரமடைந்த பெண் வீட்டார் கட்சி அலுவலகத்தை சூறையாடினர். சம்பவத்தின் போது அங்கு பெயரளவுக்கு ஓரிரு காவல் துறையினரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் அவர்களால் பிரச்சினையை தடுக்க முடியவில்லை. 

பிரச்சினையைத் தொடர்ந்து இருதரப்பையும் அழைத்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட பகுதியில் மேற்கொண்டு அசம்பாவதிம் நிகழா வண்ணம் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

click me!