21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை..! வீர மரணமடைந்த தமிழக ராணுவ வீரர் உடல் நல்லடக்கம்..!

By Manikandan S R SFirst Published May 8, 2020, 1:31 PM IST
Highlights

மாலை 7 மணி அளவில் சந்திரசேகரின் உடல் அவரது குடும்பத்தினரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. அவர்களது குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்ட பிறகு இரவு 8.30 மணி அளவில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

கடந்த சில நாட்களாக ஜம்மு-காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதால் ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் கடந்த 3 நாட்களுக்கு முன் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வீரரும் வீர மரணம் அடைந்தார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே இருக்கும் மூன்றுவாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். 31 வயதான இவர் சிஆர்பிஎப்-ன் 92வது பட்டாலியனில் பணியாற்றி வந்தார்.

பயங்கரவாதிகளின் ஊடுருவலுக்கு எதிராக நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் சந்திரசேகர் பங்கேற்றிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக படுகாயமடைந்த அவர் வீர மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் சந்திரசேகரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடந்தன. அதன்படி விமானம் மூலம் சந்திரசேகரின் உடல் திருவனந்தபுரம் கொண்டுவரப்பட்டது. பின் அங்கிருந்து ராணுவ வாகனத்தில் செங்கோட்டை கொண்டு வரப்பட்ட உடல் இரட்டைக்குளம் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. செங்கோட்டையிலிருந்து சந்திரசேகரின் கிராமத்திற்கு உடல் கொண்டு செல்லப்படும் போது ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்து மலர் தூவி மரியாதை செய்தனர். 

மாலை 7 மணி அளவில் சந்திரசேகரின் உடல் அவரது குடும்பத்தினரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. அவர்களது குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்ட பிறகு இரவு 8.30 மணி அளவில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக சந்திரசேகரின் உடலுக்கு அமைச்சர் ராஜலட்சுமி, தென்காசி மாவட்ட ஆட்சியர் சுந்தர் தயாளன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள், காவல் துறை அதிகாரிகள் சந்திரசேகரின் குடும்பத்தினர், கிராம மக்கள் என ஏராளமானோர் மரியாதை செலுத்தினர். இதனிடையே சந்திரசேகரின் குடும்பத்திற்கு தமிழக அரசு 20 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்திருந்ததன்படி அந்த தொகையை அமைச்சர் ராஜலட்சுமி குடும்பத்தாரிடம் வழங்கினார்.

click me!