சொரிமுத்து ஐயனார் கோயில் பக்தர்களுக்கு பிரசாதத்துடன் மஞ்சப்பையில் விதைப்பந்து, மரக்கன்றுகள் விநியோகம்

By SG BalanFirst Published Aug 17, 2023, 4:39 PM IST
Highlights

ஆடி அமாவாசையை முன்னிட்டு நெல்லை சொரிமுத்து ஐயனார் திருக்கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு 'மீண்டும் மஞ்சப்பை' இயக்கத்தின் கீழ் பசுமைத் தொகுப்பு வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் அருள்மிகு சொரிமுத்தையனார் திருக்கோவில்  ஆடி அமாவாசை திருவிழாவிற்கு தென்மாவட்டங்கள் முழுவதிலும் இருந்து சுமார் 2 லட்சம் பக்தர்கள் வரை வருகை தருகின்றனர். தாமிரபரணி ஆற்றின் கரையில்  வனப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால் இங்கு பிளாஸ்க் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் மரங்கள் வளர்ப்பதன் நன்மை குறித்தும் இங்கு வரும் பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'மீண்டும் மஞ்சப்பை' இயக்கத்தின் கீழ் பசுமைத் தொகுப்பு வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அகஸ்தியர் மலை உயிர்கோள பாதுகாப்பு குழுமம், மாவட்ட பசுமை குழு மற்றும் மாவட்ட வனக்குழு ஆகியவை பசுமைத் தொகுப்பை விநியோகம் செய்தனர்.

மதுரை புது மண்டபத்தைப் புதுப்பிக்க ரூ.2 கோடி... முதல்வரிடம் உறுதி கூறிய நன்கொடையாளர் ராஜேந்திரன்

2000 பக்தர்களுக்கு மஞ்சள் துணிப்பைகளில் நாட்டு வகை பூ, கனி மரக்கன்றுகள் ஆகியவற்றுடன் கோவில் பிரசாதமும் வழங்கப்பட்டன. 'பிளாஸ்டிக் இல்லாத  வழிபாடு இதுவே நமது பண்பாடு' என்ற விழிப்புணர்வு வாசகத்துடன் துண்டு பிரசுரங்களும் கொடுக்கப்பட்டன. இதுதவிர வழியில் வீசிச் செல்வதற்காகவும் 25,000 விதைப்பந்துகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஆடி அமாவாசைக்காக வந்த பக்தர்கள் மஞ்சப்பைகளில் பிரசாதத்துடன் மரக்கன்றுகள், விதைப்பந்துகளும் வழங்கப்பட்டதால் மிகுந்த ஆர்வத்துடன் அவற்றைப் பெற்றுச் சென்றனர். சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்ட இந்த இம்முன்னெடுப்பு மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் வரும் ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகள், விதைப்பந்துகள் வழங்குவோம் என ஒருங்கிணைப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இணையத்தில் கசிந்த பீகார் பாஜக பெண் எம்.எல்.ஏ.வின் மார்பிங் செய்யப்பட்ட படங்கள்!

மாவட்ட பேரிடர் மேலாண்மை சிறப்பு வட்டாட்சியர் செல்வம் மஞ்சப்பை விநியோகிக்கும் பணியை ஒருங்கிணைத்தார். பள்ளி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் பசுமைப் பொருட்கள் பயன்பாடு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

click me!