மதுபோதையில் கோர விபத்து... பேருந்து - கார் நேருக்கு நேர் மோதல்... 5 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!

By vinoth kumarFirst Published Jul 8, 2019, 2:36 PM IST
Highlights

நெல்லை அருகே காரும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நெல்லை அருகே காரும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், டி.சவேரியார்புரத்தைச் சேர்ந்தவர் சேவியர். அவர், தனது நண்பர்களான அருள்மாரி, நிக்கோலஸ், மரிய அந்தோணி என்ற பன்னீர்செல்வம் ஆகியோருடன் கன்னியாகுமரியில் தங்கியிருந்து மீன்பிடித் தொழில் செய்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு, அவர்கள் ஒரு காரில் குற்றாலத்துக்குச் செல்ல திட்டமிட்டனர். 

குமரியில் இருந்து காரில் புறப்பட்ட நிலையில், வழியிலேயே பல இடங்களில் நிறுத்தி மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. காரை மாடசாமி என்பவர் ஓட்டியுள்ளார். அம்பாசமுத்திரம் வழியாகச் சென்ற அவர்களின் கார், பத்தமடை பகுதியில் நள்ளிரவில் வந்துக்கொண்டிருந்த போது தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாடசாமி, சேவியர், நிக்கோலஸ், மித்திரன், பன்னீர்செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாயமடைந்த அருள்மணி என்பவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். மேலும், பேருந்தில் பயணம் செய்த 10 பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்தவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

click me!