தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கபோகும் கனமழை..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

By Manikandan S R SFirst Published Nov 24, 2019, 11:59 AM IST
Highlights

தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கடந்த மாதம் 16 ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வந்தது. சில மாவட்டங்களில் கனமழையும் பெய்தது. அதன்பிறகு வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவான புயல்கள் நகர்ந்து சென்றதால் தமிழகத்தின் ஈரப்பதம் ஈர்க்கப்பட்டு மழையின் அளவு வெகுவாக குறைந்தது.

இதனிடையே வெப்பச்சலனம் மற்றும் காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தற்போது மீண்டும் மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் இரண்டு நாட்களாக அதிகாலையில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது போல தென்மாவட்டங்களிலும் மழை கொட்டி வருகிறது.

இந்த நிலையில் தென்கடலோர மாவட்டங்களில் இருதினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து வானிலைமைய இயக்குனர் புவியரசன் கூறும்போது, தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

click me!