இந்தியாவிலே முதன்முறையாக சிறுமிக்கு பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்ட்: நெல்லை மருத்துவர்கள் சாதனை!

By Manikanda PrabuFirst Published Oct 19, 2023, 5:05 PM IST
Highlights

இந்தியாவிலே முதன்முறையாக சிறுமிக்கு பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை அளித்து நெல்லை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்

மாரடைப்பு ஏற்பட்ட 17 வயது சிறுமிக்கு பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை அளித்து அச்ச்சிறுமியின் உயிரை காப்பாற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் இந்திய அளவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தி உள்ளதாக மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக  நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவக்கல்லூரி கூட்டரங்கில் செய்தியாளர்களை சந்தித் கல்லூரி முதல்வர் ரேவதிபாலன் கூறுகையில், “தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த 17 வயதான சிறுமி 12-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்த போது ரத்த அழுத்தம் அதிமாக இருந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவருக்கு திடீரென தலைவலி, நெஞ்சுவலி மற்றும் பார்வையிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த 7ஆம் தேதி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.” என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நெஞ்சுவலி அதிகரித்ததை தொடர்ந்து இசிஜி எடுத்து பரிசோதித்த போது  அதில் வேறுபாடுகள் கண்டறியப்பட்ட உடன் இதயவில்துறை தலைவர் ரவிச்சந்திரன் எட்வின் தலைமையிலான மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்ட போது, அச்சிறுமிக்கு இருதயத்தில் உள்ள ரத்த குழாயில் 100 சதவீதம் அடைப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆயுத பூஜை கொண்டாட்டம்: திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி விளக்கம்!

இதையடுத்து, அச்சிறுமிக்கு உடனடியாக மருத்துவக் குழுவினர் பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்ட்  சிகிச்சை செய்தனர். இதன் மூலம், அவரது ரத்த குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பு நீக்கப்பட்டு அவர் காப்பாற்றப்பட்டார். தற்போது அவரது ரத்த அழுத்தமும் சீராக உள்ளது. சிகிச்சைக்கு பின்பு சிறுமி நலமாக உள்ளதாக நெல்லை மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “மாரடைப்பு ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட நபருக்கு மருந்து கொடுக்கப்பட்டு அதன் பின்பு ஆஞ்சியோ செய்யப்படும். ஆனால் சிறுமிக்கு ரத்த அழுத்தம் அதிமாக இருந்ததால் இந்தியாவிலேயே முதல் முறையாக மருந்து கொடுக்காமல் பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர்.” என்றார். சிறுமிக்கு சிறப்பான சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றிய மருத்துவக் குழுவினருக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

click me!