போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தை திடீர் சாவு..! திருநெல்வேலியில் அதிர்ச்சி..!

By Manikandan S R SFirst Published Jan 22, 2020, 12:27 PM IST
Highlights

திருநெல்வேலி அருகே போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் தருவையைச் சேர்த்தவர் தங்கராஜ். இவருக்கு கயல்விழி என்கிற ஒன்றரை வயது மகள் இருந்துள்ளார். கயல்விழிக்கு கடந்த சில நாட்களாக சளித்தொல்லை ஏற்பட்டு உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் குழந்தையை தங்கராஜ் சிகிச்சைக்காக கொண்டு சென்றார். இந்தநிலையில் நேற்று முன்தினம் நாடு முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

தங்கராஜும் தனது மகளை அழைத்துக்கொண்டு அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முகாமிற்கு சென்று சொட்டு மருந்து வழங்கினார். அதன்பிறகு குழந்தைக்கு சளித்தொல்லை அதிகரித்திருக்கிறது. அதனுடன் மூச்சுத்திணறலும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் குழந்தை இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி துடித்தனர். தகவலறிந்து உறவினர்களும் மருத்துவமனையில் திரண்டனர். போலியோ மருந்து கொடுக்கப்பட்டதால் தான் குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். விரைந்து வந்த காவலர்கள் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தை திடீரென பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read: அதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை..! பழிக்குப்பழியாக தீர்த்து கட்டிய மர்மகும்பல்..!

click me!