மகனுக்காக காவலர்களின் கால்களில் விழுந்த தாய் மரணம்..? விசாரணைக்கு உத்தரவிட்டது மனித உரிமைகள் ஆணையம்..!

By Manikandan S R SFirst Published May 5, 2020, 9:18 AM IST
Highlights

தனது தாயின் மரணத்திற்கு காவல்துறையினரின் அலட்சியப்போக்கே காரணம் என வேலுமணி காணொளி ஒன்று வெளியிட்டார். சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய அக்காணொளி மனித உரிமை ஆணைய அதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றது. இதையடுத்து அந்த காணொளியை அடிப்படையாகக்கொண்டு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து பாலாமணியின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் பாலாமணி(70). இவரது மகன் வேலுமணி. அப்பகுதியில் எழுமிச்சைபழம் விற்பனை செய்யும் தொழில் பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கு விதிகளை மீறி தொழில் செய்ததாக வேலுமணியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாலாமணி காவல் நிலையத்திற்கு சென்று தனது மகனை விடுவிக்க காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

அப்போது காவல் நிலையத்தில் இருக்கும் போலிசாரின் கால்களில் விழுந்து வணங்கும்படி காவல் ஆய்வாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்பின்பும் மகனை காவலர்கள் விடுவிக்காததால் மன உளைச்சலடைந்த பாலாமணி மயக்கமுற்று உயிரிழந்துள்ளார். இதையடுத்து தனது தாயின் மரணத்திற்கு காவல்துறையினரின் அலட்சியப்போக்கே காரணம் என வேலுமணி காணொளி ஒன்று வெளியிட்டார். 

சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய அக்காணொளி மனித உரிமை ஆணைய அதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றது. அந்த காணொளியை அடிப்படையாகக்கொண்டு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து பாலாமணியின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாநகர காவல் ஆணையர் விசாரணை நடத்தி 2 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மனித உரிமை ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

click me!