
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அரசு போக்குவரத்து பணிமனையின் கீழ் இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்து ஒன்றை பணிமனைக்கு எதிரே உள்ள சாலையின் ஓரத்தில் அதன் ஓட்டுநர் நிறுத்திவிட்டு பணிமனைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அரசு பேருந்தில் எந்த ஒரு பிரேக்கும் செயல்படாமல் இருந்ததையடுத்து தானாக இயங்கி (self start ஆகி) சுமார் 50 மீட்டர் வரை சாலை ஓரத்தில் இறங்கி அருகில் உள்ள வீட்டிற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.
இதில் வீட்டிற்குள் இருந்த மூதாட்டி நல் வாய்ப்பாக உயிர் தப்பியுளார். மேலும், இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருவதோடு வீட்டிற்குள் புகுந்த அரசு பேருந்தை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
மேலும், பணியில் இருந்த ஓட்டுநர் பேருந்தை கியரில் நிறுத்தி வைக்காததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. ஓட்டுநர் அஜாக்கிரதையாக செயல்பட்டதால் இது போன்ற விபத்துக்கள் ஏற்பட்டதை அடுத்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.