‘நீ டாக்டரா இல்ல ரவுடியா?’ மருத்துவர்களிடம் டிஎஸ்பி அத்துமீறிய விவகாரம்... மனித உரிமை ஆணையம் அதிரடி...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 29, 2021, 7:19 PM IST
Highlights

அங்கு வந்த பரமக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் மருத்துவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. 

ராமநாதபுரத்தில் கொரோனா சிகிச்சை மைய பணிக்கு வந்திருந்த மருத்துவர்களை,  டி.எஸ்.பி, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை டி.ஐ.ஜி.க்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு கலைக் கல்லூரி, கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு, பல்வேறு ஊர்களில் இருந்து மருத்துவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கொரோனா சிகிச்சை மைய பணிக்காக வந்திருந்த சாயல்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மணிகண்டன், பார்த்திபனூர் மருத்துவர் விக்னேஷ்  ஆகிய இருவரும் 27ம் தேதி இரவு 8:30 மணிக்கு உணவருந்த கடைக்கு சென்றுள்ளனர்.அங்கு வந்த பரமக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் மருத்துவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் நீ டாக்டரா இல்ல ரவுடியா? என கேள்வி எழுப்பிய அவர், இருவரையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி காவல்நிலையம் அழைத்துச் சென்று, அழைத்துச் சென்று, வெளியில் காக்க வைத்துள்ளார். 

தகவலறிந்த மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் தலையிட்டதை அடுத்து அதிகாலை 1 மணிக்கு இரு மருத்துவர்களும் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர்.  இதுதொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன், இதுசம்பந்தமாக இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்கும்படி, மதுரை டி.ஐ.ஜி.க்கு உத்தரவிட்டுள்ளார்.

click me!