ஊராட்சித் தலைவர் மரணம்..! வெற்றி பெற்ற சில நிமிடங்களில் நிகழ்ந்த பரிதாபம்..!

By Manikandan S R SFirst Published Jan 3, 2020, 12:29 PM IST
Highlights

ஊராட்சித் தலைவராக வெற்றி பெற்றவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 9 ம் தேதி தொடங்கி 16 ம் தேதி நிறைவடைந்தது. தகுதி பெற்ற வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இருநாட்களிலும் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை 8 மணியளவில் தொடங்கியது. விடிய விடிய தொடர்ந்த வாக்கு எண்ணிக்கை தற்போது வரை நீடிக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான திமுக, ஆளும் அதிமுகவை விட அதிக இடங்களில் வென்றுள்ளது. இதனிடையே ஊராட்சித் தலைவராக வெற்றி பெற்ற 70 வயது முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ஆதனூர் ஊராட்சி. இங்கு தலைவர் பதவிக்கு மணிவேல்(70) என்பவர் போட்டியிட்டார்.

இவர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ வெண்கலமணியின் சகோதரர் ஆவார். தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்த அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில் ஆரம்பம் முதலே மணிவேல் முன்னிலையில் இருந்தார். இறுதியில் 962 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை 166 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரியிடம் பெற்ற அவர் ஆதரவாளர்களுடன் வீட்டிற்கு சென்றார்.

இந்தநிலையில் வீட்டிற்கு சென்ற அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆதரவாளர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மணிவேலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். வெற்றி பெற்ற சில மணி நேரங்களிலேயே ஊராட்சி தலைவர் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!