இரண்டு புலிகள் மர்மமான முறையில் இறப்பு! விஷம் வைத்து கொல்லப்பட்டதா? வனப்பாதுகாவலர் பரபரப்பு அறிக்கை..!

By vinoth kumarFirst Published Sep 10, 2023, 11:26 AM IST
Highlights

நீலகிரி மாவட்டத்தில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது அதே நேரத்தில் வனத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் புலிகள் இறப்பதும் தொடர் கதையாகி வருகிறது.  கடந்த இரு வாரத்தில் மட்டும் 5 புலிகள் இறந்துள்ளன. 

நீலகிரி அவலாஞ்சி அணை உபரி நீர் வாய்க்கால் அருகே உயிரிழந்த 2 பெண் புலிகளின் உடல்களில் எந்த காயங்களும் இல்லை. 2 நாட்களுக்கு முன் இரண்டும் இறந்திருக்கலாம் என வனப்பாதுகாவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது அதே நேரத்தில் வனத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் புலிகள் இறப்பதும் தொடர் கதையாகி வருகிறது.  கடந்த இரு வாரத்தில் மட்டும் 5 புலிகள் இறந்துள்ளன. இந்நிலையில் உதகை அருகே உள்ள எமரால்டு கிராமம் அருகில் உள்ள நேரு நகர் பாலத்தில் இருந்து அவலாஞ்சி அணை, தண்ணீர் தொட்டிக்கு செல்லும் வழியில் உள்ள  ஆற்றில் மர்மமான  முறையில் இரண்டு புலிகள்  இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக முதுமலை புலிகள் காப்பகம் வனப்பாதுகாவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- 9.9.2023 அன்று மாலை 4.30 மணியளவில் அவலாஞ்சி அணை உபரி நீர் வாய்க்கால் அருகே இரண்டு புலிகள் இறந்து கிடப்பதாக எம்ரால்டு பீட் பணியாளர்கள் தெரிவித்தனர். உடனடியாக நீலகிரி மாவட்ட வன அலுவலர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அவரது தகவலின்படி, இரண்டும் பெண் புலிகள். வாய்க்காலில் ஒன்று இறந்து கிடக்கிறது. மற்றொன்று வாய்க்காலின் மேல் கரையில் உள்ளது. இரண்டு புலிகளின் உடல்களிலும் காயங்கள் எதுவும் இல்லை. இரண்டு நாட்களுக்கு முன் இரண்டும் இறந்திருக்கலாம்.

தேவராஜ் IFS. ACF (HQ) தலைமையில் 20 பணியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு சம்பவ இடத்தை சுற்றியுள்ள பகுதிகளை தணிக்கை செய்து வருகிறது. இந்த இரண்டு புலிகளும் விஷம் குடித்து இறந்திருக்கலாமோ என களத்தில் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டிதலின் படி இன்று 10.9.2023 காலை பிரேத பரிசோதனை செய்யப்படும். மூன்று வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் இரண்டு கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேதப் பரிசோதனை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மாதிரிகள் எடுக்கப்பட்டு நச்சுயியல் ஆய்வுக்கு அனுப்பப்படும். பிரேத பரிசோதனைக்கு பின்னரே இறப்பிற்கான உண்மையான காரணம் என தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!