Bipin rawat : சிக்கியது கருப்புப்பெட்டி.. கடைசி நிமிடத்தில் பைலட் பேசியது என்ன? வெளியாகபோகும் முக்கிய தகவல்.!

By vinoth kumarFirst Published Dec 9, 2021, 10:05 AM IST
Highlights

 இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 14 வீரர்களில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்திருந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குன்னூரில் முப்படைகள் தளபதி  பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரை உயிர் பலிக்கொண்ட ஹெலிகாப்டர்  விபத்து இடத்தில் இந்திய விமானப் படையினர் ஆய்வு நடத்திய போது கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது. 

கோவை சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் எம்.ஐ. 17வி ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்தனர். இந்த ஹெலிகாப்டர் காட்டேரி பார்க் என்ற இடத்தில் மலைமுகட்டில் சிக்கி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 14 வீரர்களில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்திருந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது மறைவுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

 

இந்த விபத்தில் உயிரிழந்த வீரர்களின் உடல்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. கோவையில் இருந்து வந்த மருத்துவ குழுவினர் உடல்களை பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இன்று காலை வெலிங்டன் பயிற்சி கல்லூரி மைதானத்தில் ராணுவ மரியாதை செலுத்தப்படுகிறது. அதன்பின் தனித்தனி ராணுவ வாகனங்களில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களை சூலூர் வரை கொண்டு சென்று சூலூரில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது. 

இந்நிலையில், ஹெலிகாப்டர் உள்ள கருப்பு பெட்டியில் விபத்துக்கு முன் கடைசி நிமிடத்தில் பைலட் பேசியது பதிவாகி இருக்கும். மேலும் எவ்வளவு அடி உயரத்தில் பறந்தது என்பன உள்ளிட்ட விவரங்களும் பதிவாகி இருக்கும். விபத்துக்கான காரணத்தை கண்டறிய கருப்பு பெட்டி முக்கியமானது என்பதால், கருப்பு பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.  இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்திலிருந்து கருப்பு பெட்டி நேற்று இரவு எடுத்து செல்லப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட கருப்புப் பெட்டி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விமானம் விபத்து தொடர்பாக முக்கிய தகவல் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

click me!