மதுரையில் சித்திரை திருவிழா... அடம்பிடிக்கும் தேர்தல் ஆணையம்... உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி..!

By vinoth kumarFirst Published Mar 12, 2019, 1:03 PM IST
Highlights

மதுரையில் மக்களவை தேர்தல் நடைபெறும் தேதியை ஏன் மாற்றக்கூடாது? என தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து நாளை மறுநாள் கருத்தை தெரிவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் மக்களவை தேர்தல் நடைபெறும் தேதியை ஏன் மாற்றக்கூடாது? என தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து நாளை மறுநாள் கருத்தை தெரிவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே மதுரையின் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா, இந்தாண்டு ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறகிறது. ஏப்ரல் 7-ம் தேதி மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில், முக்கிய வைபவமான தேரோட்டம் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மதுரை சித்திரை திருவிழா தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் தேர்தல் நாளன்று இந்தாண்டு சித்திரை திருவிழா வருவதால், மக்களால் எப்படி வாக்களிக்க முடியும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து சித்திரை திருவிழா தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் இன்று 2-வது நாளாக நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் சித்திரை திருவிழாவின் போது தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்து வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக வழக்கு நேற்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மக்களவை தேர்தலை தள்ளி வைக்க முடியுமா என்பது குறித்து தேர்தல் விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு பதிலளித்து தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட தேதியில் நடத்துவோம். ஒத்திவைக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையத்திற்கு ஆர்வமில்லையா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தமிழகத்தின் முக்கியமான திருவிழாக்களில் ஒன்று சித்திரை திருவிழா. ஆகையால் அந்நாளில் தேர்தலை நடத்தலாம் என மாவட்ட நிர்வாகம், போலீசார் தடையில்லாசான்று வழங்கியது. மேலும் திருவிழா நாளில் மதுரையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், மக்கள் எப்படி வாக்களிக்கச் செல்வார்கள் என நீதிபதிகள் வினவியுள்ளனர்.

 

இந்நிலையில் சித்திரை திருவிழா நடைபெறுவதால் தேர்தலை தள்ளிவைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து நாளை மறுநாள் தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

click me!