முடிந்தது தேர்தல் திருவிழா..! சின்ன சின்னதாய் நடந்த சுவாரசியங்கள் என்ன தெரியுமா..?

By Manikandan S R SFirst Published Jan 4, 2020, 1:41 PM IST
Highlights

தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் வெளியாகி இருக்கிறது. அதில் பல்வேறு சுவாரசிய சம்பவங்கள் நடந்திருக்கிறது. அவை என்ன என்பதை காண்போம்.

*திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சி மன்ற தலைவராக 82 வயது மூதாட்டியான விசாலாட்சி வெற்றி பெற்றுள்ளார். அதே போல மதுரை மேலூரில் வீரம்மாள் என்கிற 79 வயது மூதாட்டி அரிட்டாபட்டி ஊராட்சித் தலைவராக தேர்வாகி இருக்கிறார்.

*கிருஷ்ணகிரி மாவட்டம் கே.என் தொட்டி ஊராட்சி தலைவராக 21 வயதே நிரம்பிய கல்லூரி மாணவியான ஜெயராணி வெற்றி பெற்றிருக்கிறார். திருவாரூர் மாவட்டம் பூசலாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுபிதா(22) வெற்றி அடைந்திருக்கிறார்.

* நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்தில் போட்டியிட்ட திருநங்கை ரியா திமுக சார்பாக வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தின் முதல் திருநங்கை கவுன்சிலர் என்கிற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

* அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரியில் தங்கள் முதல் தேர்தல் வெற்றிக்கணக்கை தொடங்கியுள்ளனர்.

*விருதுநகர் மாவட்டம் கான்சாபுரம் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்த சரஸ்வதி தனது வேலையை ராஜினாமா செய்து அதே ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவர் அதிக வாக்குகள் பெற்று தலைவராக தற்போது தேர்வாகி இருக்கிறார்.

* பட்டியலின பெண்களுக்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டதால் தூத்துக்குடி மாவட்டம் பிச்சிவிளை ஊராட்சி தலைவர் தேர்தலை கிராம மக்கள் புறக்கணித்தனர். அங்கு 10 ஓட்டுகள் மட்டுமே பெற்று பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

* சம அளவில் ஓட்டுகள் வாங்கியதால் பல இடங்களில் ஊராட்சி தலைவர்களும் உறுப்பினர்களும் குலுக்கல் முறையில் தேர்வாகி உள்ளனர்.

*திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் ஒருவர் தனது இரு மனைவிகளையும் தேர்தலில் நிறுத்தி ஊராட்சி தலைவிகளாக வெற்றி பெற வைத்துள்ளார்.

*பெரம்பலூர் மாவட்டம் ஆதலூர் ஊராட்சி தலைவராக தேர்வாகிய மணிவேல், வெற்றி பெற்ற சில நிமிடங்களிலேயே மாரடைப்பால் மரணமடைந்தார்.

*வேதாரண்யம் அருகே இருக்கும் கருப்பம்புலம் ஊராட்சியில் 32 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடந்துள்ளது. அங்கு பட்டதாரி இளைஞர் ஒருவர் தலைவராக தேர்வாகி இருக்கிறார்.

click me!