
மதுரையில் முதியோர் இல்லத்தில் வசிக்கும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட 2வது அலை சுனாமி வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மே 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அப்படி இருந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 34,000ஐ தாண்டியுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்திய அளவில் தினசரி கொரனோ பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசு அதிர்ச்சி தரும் தகவலை நேற்று வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், மதுரை வின்சென்ட் நகர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 21 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாததால் அனைவரும் மற்றவர்களுடன் பழகி வருகின்றனர்.
இதனால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகையால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது. முன்னதாக, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் 74 குழந்தைகளுக்கும், ஏர்வாடியில் மனநோயாளிகள் 11 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியான சம்பவம் குறிப்பிடத்தக்கது.