தனியார் பேருந்து-லாரி பயங்கர மோதல்..! மேல்மருவத்தூர் சென்ற பக்தர்கள் படுகாயம்..!

By Manikandan S R SFirst Published Jan 27, 2020, 4:03 PM IST
Highlights

கிருஷ்ணகிரி அருகே மேல்மருவத்தூர் சென்று வந்த பக்தர்களின் பேருந்து விபத்தில் சிக்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இருக்கிறது தேர்ப்பேட்டை கிராமம். இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலையணிந்து விரதம் மேற்கொண்டிருந்தனர். பின் தனியார் சொகுசு பேருந்து ஒன்றில் 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு கிளம்பினர். தரிசனம் முடிந்த பிறகு மீண்டும் அதே பேருந்தில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே இருக்கும் சின்னபர்கூர் என்கிற இடத்தில் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் பேருந்திற்கு முன்னால் லாரி ஒன்று சென்றுள்ளது. வேகமாக வந்த பேருந்து எதிர்பாராத விதமாக லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. இதில் பேருந்தின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கியது. பேருந்தில் பயணம் செய்த 4 பேர் படுகாயமடைந்தனர். 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அந்தவழியாக சென்றவர்கள் விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் பர்கூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: 11 வயது மகளை காமப்பசிக்கு இரையாக்க துடித்த தந்தை..! அதிர்ந்துபோன தாய்..!

click me!