கிருஷ்ணகிரியில் கணக்கை தொடங்கிய கொரோனா... டாக்டருக்கு தொற்று உறுதி... 11 பேருக்கு அறிகுறி..!

By vinoth kumarFirst Published Apr 30, 2020, 10:48 AM IST
Highlights

தமிழகத்திலேயே கொரோனா இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்து வந்த நிலையில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தமிழகத்திலேயே கொரோனா இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்து வந்த நிலையில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து குமரி வரை அனைத்துப் பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த வாரம் தருமபுரியில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே கொரோனா பாதிப்பிலிருந்து தப்பித்துள்ளதாக கூறப்பட்டது. இந்த மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக கொரோனா நோய் இங்கு ஊடுருவவில்லை. இதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சுடன் இருந்தனர். இதுதொடர்பாக நேற்று காலை முதல்வர் எடப்பாடி பேட்டியளிக்கையில் கூட தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே பச்சை பகுதிக்குள் உள்ளது என தெரிவித்திருந்தார். அவர் பேட்டியளித்த சில மணிநேரங்களிலேயே கிருஷ்ணகிரியில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர் ராயக்கோட்டையில் வசித்து வருகிறார். இவரது கணவர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். இவர், கடந்த வாரம் விடுமுறையில் கிருஷ்ணகிரிக்கு வந்து, வீட்டில் தங்கிவிட்டு, நேற்று முன்தினம் விழுப்புரம் திரும்பியுள்ளார். பிறகு நேற்று மீண்டும் பணிக்கு சென்றவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரானா தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, கிருஷ்ணகிரியில் உள்ள அவரது மனைவி, தந்தை, அவரது வீட்டின் கீழ் பகுதியில் வசிக்கும் 11 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்தது. தற்போது, கிருஷ்ணகிரி வந்து சென்ற  மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு சுகாதாரத்துறை தரப்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

click me!