செம குட் நியூஸ்.. தமிழ்நாட்டில் கொரோனாவிலிருந்து முழுமையா மீண்ட 3வது மாவட்டம்

By karthikeyan VFirst Published Apr 30, 2020, 4:14 PM IST
Highlights

தமிழ்நாட்டில் ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து கரூர் மாவட்டம் கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்டுள்ளது. 
 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக கட்டுக்குள் வந்துள்ளது. தமிழ்நாட்டில் தினமும் கொரோனா பாதிப்பு உறுதியாகும் எண்ணிக்கையில் 80-90% சென்னையை சேர்ந்தவர்கள் தான். 

நேற்று தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 104 பேரில் 94 பேர் சென்னை. தமிழ்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 2162. சென்னையில் மட்டுமே 768 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக சென்னையை தவிர மற்ற மாவட்டங்கள் அனைத்திலும் பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வந்துள்ளது. 

சென்னையில் மட்டும்தான் பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதுவும் சென்னையில் சமூக தொற்று ஆரம்பித்துவிட்டதால் நிலைமை மோசமாகிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக கொங்கு மாவட்டங்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. ஆனால் ஈரோடு முழுமையாக கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில், கோவை, திருப்பூர் மாவட்டங்களும் மீண்டுவருகின்றன. 

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி கொரோனா பாதிப்பே இல்லாத பச்சை மண்டலமாக நீடிக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஆரம்பத்தில் தாறுமாறாக எகிறிய ஈரோட்டில், 70 பேரும் கொரோனாவிலிருந்து குணமடைந்ததால் ஈரோடு கொரோனாவிலிருந்து மீண்ட முதல் மாவட்டமானது. அதைத்தொடர்ந்து நீலகிரியிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 9 பேரும் குணமடைந்தனர். 

இந்நிலையில், ஈரோடு, நீலகிரியை தொடர்ந்து கரூர் மாவட்டம் கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்ட மூன்றாவது மாவட்டமாகியுள்ளது. கரூரில் 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், 41 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் இன்று குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனாவிலிருந்து மீண்ட மூன்றாவது மாவட்டமாக கரூர் திகழ்கிறது. 

தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 2162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1210 பேர் முழுமையாக குணமடைந்து மீண்டுள்ளனர். 922 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 27 பேர் உயிரிழந்துள்ளனர். 
 

click me!