ஃபயாஸ்தீன் பேச்சை கவனிச்சீங்களா? திமுகவின் கல்லூரி வசூல் வேட்டையை விளாசும் அண்ணாமலை!

By SG BalanFirst Published Aug 16, 2023, 7:47 PM IST
Highlights

ரூ.25 லட்சம் கொடுத்துதான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன் என்ற மாணவர் ஃபயாஸ்தீன் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் பாலாஜி மருத்துவக் கல்லூரியில் தான் சேர்ந்திருக்கிறார் என அண்ணாலை சுட்டிக்காட்டுகிறார்.

அண்மையில், நீட் தேர்வினால் குறைவான மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போன மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்துகொண்டார். தாயில்லாத மகனை இழந்த சோகத்தில் அவரது தந்தையும் தற்கொலை செய்துகொண்டார். அதே சமயத்தில் மாணவர் ஜெகதீஸ்வரனின் நண்பர் ஃபயாஸ்தீன் நீட் தீர்வில் குறைவான மதிப்பெண் பெற்றாலும் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிட்டார்.

மாணவர் ஃபயாஸ்தின் நீட் தேர்வால் வசதியானவர்களுக்கே வாய்ப்பு கிடைப்பதாகவும் தன் நண்பனைப் போன்ற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரமுடியாமல் போகிறது என்றும் கூறி, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் குரல் கொடுத்தார். குறிப்பாக, மாணவர் ஜெகதீஸ்வரனின் இறுதிச் சடங்கிற்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடமும், திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று சொன்னீர்களே, என்ன செஞ்சீங்க என்று நறுக்கென்று கேள்வி கேட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

தான் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றாலும், ரூ.25 லட்சம் செலுத்தி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பதாகவும் ஃபயாஸ்தின் கூறினார். இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஃபயாஸ்தின் பேச்சை வைத்து திமுகவை கடுமையாகச் சாடியுள்ளார்.

விஸ்வகர்மா திட்டத்தில் ஒரு லட்சம் கடன்! அதிகபட்ச வட்டியே 5% தான்! மத்திய அரசு அறிவிப்பு

கன்னியாகுமரியில் செவ்வாய்க்கிழமை இதுபற்றிப் பேசிய அண்ணாமலை, "நீட் தேர்வில் தோல்வி அடைந்து தற்கொலை செய்துகொண்ட மாணவரின் நண்பர் ஒருவர் ஆவேசமாக பேசியிருக்கிறார். நான் 25 லட்சம் ரூபாய் கொடுத்துதான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன் என்று அந்த மாணவரே கூறுகிறார். அந்த மாணவரின் பெயர் ஃபயாஸ்தீன். அவர் எந்தக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார் தெரியுமா? திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான பாலாஜி மருத்துவக் கல்லூரியில் தான் அந்த மாணவர் சேர்ந்திருக்கிறார்" என்றார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, திமுகவினர் தொடங்கும் தனியார் கல்லூரிகளுக்கு உரிமம் வழங்கி கொடுத்து, அவர்கள் வசூல் செய்வதை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். ஒவ்வொரு சீட்டையும் 1 கோடி, 2 கோடி என்று விற்க வேண்டும் என்பதுதான் திமுகவின் நோக்கம் என்றும் அதனால்தான் திமுக நீட் தேர்வை எதிர்க்கிறது என்றும் அண்ணாமலை சாடியுள்ளார்.

"2006 முதல் 2011 வரை 5 ஆண்டு காலத்தில் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று கூறிய அண்ணாமலை, "திமுக 6 முறை ஆட்சியில் இருந்தும் வெறும் 6 அரசு மருத்துவக் கல்லூரிகளைதான் கொண்டு வந்திருக்கிறது. ஆனால், பிரதமர் மோடி ஒரே நேரத்தில் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டுவந்திருக்கிறார். இதுதான் திராவிட மாடலுக்கும் மோடி மாடலுக்கும் உள்ள வித்தியாசம்" எனவும் எடுத்துரைத்தார்.

ஃபயாஸ்தீன் பேச்சை கவனிச்சீங்களா? திமுகவின் கல்லூரி வசூல் வேட்டையை விளாசும் அண்ணாமலை!

click me!