ஆன்லைன் சூதாட்டம்: உயிரிழந்தவர்களின் சாம்பலை ஆளுநருக்கு அனுப்பிய தி.க.வினர்

By Velmurugan sFirst Published Mar 16, 2023, 6:25 PM IST
Highlights

ஆன்லைன் சூதாட்டத்தில் உயிரிழந்தவர்களின் சாம்பல் தபால் மூலம் ஆளுநருக்கு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்ய கோரி பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தமிழகத்தில் பலரும் தங்களது பணத்தை இழந்துள்ளனர். அதில் சிலர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். 

தமிழக அரசு சார்பிலும் சட்டமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் என்.ஆர் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நீண்ட நாட்களாக கிடப்பில் போட்ட நிலையில், தற்போது விளக்கம் கேட்டு அதனை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், ஈரோடு மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டவர்களின் சாம்பல்களை தமிழக ஆளுநருக்கு தபால் மூலம் அனுப்பும் போராட்டம் இன்று நடைபெறும் என அறிவித்தனர். ஆனால் இந்த போராட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்து விட்டனர். 

இருப்பினும் காளைமாட்டு சிலை அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரகுருபரன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திரண்டு வந்து ஆன்லைன் விளையாட்டை கண்டித்தும், அதனை தடை செய்ய கோரியும் கோசம் எழுப்பினர். ஆன்லைன் விளையாட்டில் இறந்தவர்களின் சாம்பல்களை தபால் கவரில் போட்டு அதனை தபால் மூலம் ஆளுநருக்கு அனுப்புவதற்காக ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்திற்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர். 

தமிழகத்தில் நாளை முதல் பால் தட்டுப்பாடு? பால் உற்பத்தியாளர்களின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி

அப்போது டவுன் டிஎஸ்பி ஆறுமுகம் தலைமையில், காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டு வேன் மூலம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஈரோடு தலைமை தபால் நிலையம் முன்பு காவல் துறையினர் குவிக்கப்பட்டு இருந்தபோதிலும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொறுப்பாளர் ஜனனி, தனியாக சென்று ஆளுநருக்கு சாம்பலை அனுப்பி தனது உணர்வை வெளிப்படுத்தினார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தர்மபுரியில் கோர விபத்து: தரைமட்டமான பட்டாசு குடோன்; 2 பேர் உடல் சிதைந்து பலி

click me!