பழமை வாய்ந்த சாமி சிலையை சம்மட்டியால் உடைத்த மர்ம கும்பல்... பொதுமக்கள் மறியல்... போலீஸ் குவிப்பால் பதற்றம்..!

By vinoth kumarFirst Published Oct 21, 2019, 11:37 AM IST
Highlights

ஈரோடு அருகே நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து, சாமி சிலைகளை சேதப்படுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஈரோடு அருகே நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து, சாமி சிலைகளை சேதப்படுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தொப்ப பாளையத்தில் புகழ்மிக்க பொன் காளியம்மன் கோவிலுக்கு சொந்தமான காளியண்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கூரை காளியண்ணன், விளைய காளியண்ணன் என்ற 6 அடி உயரத்தில் 2 சாமி சிலைகள் உள்ளன. இந்த கோவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில். பொன் காளியம்மன் கோவில் பொங்கல் விழா அன்று இந்த சிலைகள் வைத்து சிறப்பாக வழிபாடு நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு சுமார் 10 பேர் கொண்ட கும்பல் கோவில் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். கோவிலுக்கு நுழைந்த அனைவருமே முகம் தெரியாதபடி துணியால் மூடி முகத்தை மறைந்திருந்தனர். அந்த முகமூடி கும்பல் கோவில் வளாகத்தில் இருந்த கூரை காளியண்ணன் மற்றும் விளைய காளியண்ணன் ஆகிய 6 அடி சிலைகளை சம்மட்டி மற்றும் இரும்பு கம்பிகளால் அடித்து நொறுக்கினர். இதில் சாமி சிலைகளின் முழுவதும் சேதமடைந்து. இதனையடுத்து அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியது.

சாமி சிலை உடைத்திருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் கோவில் முன் பொதுமக்கள், பக்தர்கள் குவிய தொடங்கினர். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதையொட்டி அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. மேலும், சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே, சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

click me!