கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் சேதுபதி மட்டும் அரியலூருக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் சேதுபதி திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் அருகே திருமணமான 2 மாதத்தில் புதுமண தம்பதி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள ஆர்.புதுக்கோட்டையச் சேர்ந்தவர் சேதுபதி (27). இவர் அரியலூரில் ரயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கும் திண்டுக்கல் எம்.வி.எம். நகரைச் சேர்ந்த மோனிஷா (22) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் சேதுபதி மட்டும் அரியலூருக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் சேதுபதி திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வந்து அடக்கம் செய்யப்பட்டது.
திருமணம் முடிந்து 2 மாதங்களிலேயே கணவர் உயிரிழந்துவிட்டதால் சோகத்தில் இருந்த மோனிஷா தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோனிஷாவின் உறவினர்கள் சேதுபதி வீட்டுக்கு சீர்வரிசை பொருட்களை எடுத்து வருவதற்காக சென்றனர். அங்கு இரு குடும்பத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்.
கணவர் உயிரிழந்த சோகத்தில் இருந்த மோனிஷா அடுத்தடுத்து இரு குடும்பத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் கடும் மனஉளைச்சலில் இருந்துள்ளார். இதனால், மோனிஷா வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மோனிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான 2 மாதத்தில் புதுமண தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.