அமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சி உலக சாதனையாக அங்கீகரிப்பு

By Velmurugan sFirst Published Dec 24, 2022, 10:12 AM IST
Highlights

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், இடையக்கோட்டை ஊராட்சியில் நேற்று இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 117 ஏக்கர் நிலப்பரப்பில் 2 மணி நேரத்தில் 6.40 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்து, உலக சாதனை நிகழ்வு நிகழ்த்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டத்திற்கு உட்பட்ட இடையக்கோட்டை ஊராட்சியில் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் உலக சாதனை நிகழ்ச்சியாக 6.40 லட்சம் மரக்கன்றுகளை நட முடிவு செய்யப்பட்டது. இதற்காக இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 117 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களாக இப்பகுதியில் இருந்த கருவேல மரம், செடி, கொடிகளை அகற்றும் பணிகள் நடைபெற்றன.

சாப்பாடு நல்லா இருக்கா? மாணவர்களுக்கு உணவு பரிமாறி ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி

இந்நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என மொத்தமாக 16 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

4 மணி நேரத்தில் 6.40 லட்சம் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்த நிலையில், 2 மணி நேரத்திலேயே அனைத்து மரக்கன்றுகளும் நடப்பட்டுவிட்டன. இதனை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய 4 உலக சாதனை நிறுவனங்கள் உலக சாதனையாக அங்கீகரித்து அதற்கான சான்றிதழ்களை வழங்கின.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தேதி நீட்டிப்பு? அமைச்சர் விளக்கம்

இதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “6 லட்சம் மரக்கன்றுகளை 4 மணி நேரத்தில் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 2 மணி நேரத்திலேயே 6 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. நான் அமைச்சராக பங்கேற்கும் முதல் அரசு விழா திண்டுக்கல்லில் நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் வன பரப்பு 27 சதவீதமாக உள்ளது. இதனை அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

நான் மீண்டும் திண்டுக்கல் வரும்போது தற்போது நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் எப்படி இருக்கின்றன என்று பார்ப்பேன். இதனை பராமரிப்பது அனைவரின் பொறுப்பு. இதில் பொதுமக்களும் ஆர்வமுடன் பங்கெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

click me!