தர்மபுரியில் கோர விபத்து: தரைமட்டமான பட்டாசு குடோன்; 2 பேர் உடல் சிதைந்து பலி

By Velmurugan sFirst Published Mar 16, 2023, 12:16 PM IST
Highlights

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பட்டாசு குடோனில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம்  பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டியில் சரவணன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோனில் வழக்கம் போல் கூலி தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் குடோனில் வேலை செய்து கொண்டிருந்த பழனியம்மாள் (வயது 65) மற்றும் முனியம்மாள் (50) ஆகிய இருவரும்  சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் சிவலிங்கம் என்பவர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 

சென்னையில் இன்ஸ்டா காதல் மூலம் 13 வயது சிறுமியை கற்பழித்த 17வயது சிறுவன்

சம்பவ இடத்தில் பென்னாகரம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்துக்கு குறித்து பாப்பாரப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள குடோன் உரிமையாளர் சரவணனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

நிவாரணம் அறிவிப்பு

இந்நிலையில், விபத்து குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி உள்வட்டம், சிகரலஅள்ளி தரப்பு, நாகதாசம்பட்டி கிராமத்தில் இயங்கிவந்த தனியார் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் நாகதாசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி.முனியம்மாள் க/பெ.காவேரி (வயது 65) மற்றும் சேலம் மாவட்டம் மேச்சேரியைச் சேர்ந்த திருமதி.பழனிம்மாள் க/பெ.பூபதி (வயது 50) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மீட்புப்பணிகள் மற்றும் சிகிச்சை விபரங்கள் குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் மூலம் அறிந்தேன்.  

மேலும், இவ்விபத்தில் கடுமையான காயமடைந்து பென்னாகரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திரு.சிவலிங்கம், த/பெ.பொன்னுமாலை (வயது 52) அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 இலட்சம் ரூபாயும்,  கடும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் திரு.சிவலிங்கம் அவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!