
கடலூர் மாவட்டத்தில் வகுப்புக்கு சரியாக வராத பள்ளி மாணவனை, ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்து கால்களால் எட்டி உதைக்கும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நந்தனார் அரசுப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 6ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், 12ம் வகுப்பு மாணவர் ஒருவர் வகுப்புக்கு சரியாக வரவில்லை என்ற காரணத்திற்காக அவரை முட்டிபோட வைத்து பிரம்பால் ஆசிரியர் கடுமையாக அடித்துள்ளார். இதோடு நிற்காமல் அந்த மாணவரை ஆசிரியர் கால்களால் எட்டியும் உதைத்துள்ளார்.
இந்த காட்சியை படம் பிடித்த சக மாணவர் அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதையடுத்து தற்போது வைரலாகி வருகிறது. இந்த காட்சியை பார்த்து பலரும் கொதிப்படைந்தனர். உடனடியாக இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென என வலியுறுத்தி வருகின்றனர்.