கொடூர கொரோனாவால் உயிரிழந்த விருத்தாசலம் வட்டாச்சியர்.. மரணத்திற்கு முன் கலங்க வைக்கும் உருக்கமான பதிவு..!

By vinoth kumarFirst Published Jul 19, 2020, 11:46 AM IST
Highlights

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த விருத்தாசலம் வட்டாட்சியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த விருத்தாசலம் வட்டாட்சியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும், நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. களத்தில் நின்று பணியாற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டவர்களை தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாட்சியராக கவியரசு(45) பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யபட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனயைில் உயிரிழந்தார். 

இரவு மருத்துவமனையில் இருந்தபோது தனது முகநூலில் மிகுந்த நம்பிக்கையோடு மக்களுக்கு இந்த செய்தியைச் சொன்னார். அன்புக்கும் பாசத்திற்கும் உரிய விருதை வட்ட வாழ் பெருங்குடி மக்களே. என் மேல் எப்போதும் பாசமழை பொழியும் ஊடக நண்பர்களே. எப்போதும் அன்பு பாராட்டும் காவல் அலுவலர்களே. எனது இரண்டாண்டு வருவாய் வட்டாட்சியர் பணியில் உடன் பயணித்த எனது பாசமிக்க கிராம நிர்வாக அலுவர்களே. அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலர்களே. வருவாய ஆய்வாளர்களே. கிராம உதவியாளர்களே. உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை சிரம் தாழ்த்தி சமர்ப்பித்துக் கொள்கின்றேன்.

கோவிட் - 19 அறிகுறிகள் காரணமாக தற்போது சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் சிகிச்சையில் உள்ளதால் வருவாய் வட்டாட்சியர் பணியில் இருந்து விலகி விடைபெறுகின்றேன். சிறப்பு நன்றிகள், எனது ஈப்பு ஓட்டுநர் பாலு ஒரு சகோதரனைப்போல இதுகாறும் எனை பாதுகாத்தாய். மீண்டும் மீண்டு வந்து அனைவருக்கும் நன்றி சொல்வேன் என்ற நம்பிக்கையுடன் உங்கள் கவியரசு'

இப்படி பதிவிட்டு தற்காலிகமாக விலகி விடைபெறுகிறேன் என்று மருத்துவமனைக்குச் சென்றவர் இப்போது நிரந்தரமாக விடைபெற்றுச் சென்றுவிட்டார். தனது ஒரே மகள் ஆரத்யா மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். மனைவியும் மகளும் சொந்த ஊரான விழுப்புரத்தில்தான் இருந்தார்கள். கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததும் அவர்களை கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு இவர் மட்டும் விருத்தாசலத்தில் வட்டாட்சியர் இல்லத்திலேயே தங்கியிருந்தார்.

கடந்த மார்ச் 27-ம் தேதி மகளுக்கு முகநூலில் அவர் எழுதியிருந்த வரிகளில் மகள் மீதான அவரின் உயர்ந்த அன்பு வெளிப்படுகிறது. என் அன்பு மகளே... உனை நேரில் காணும் நாள் எந்நாளோ அந்நாளே என் வாழ்வின் பொன்னாள்' என்று எழுதியவர் தன் ஆசைமகளின் அன்புமுகம் காணாமலே விடைபெற்று விட்டார். சக மனிதரிடத்தில் அன்பு காட்டும் மனிதநேயமிக்க கவியரசுவின் மறைவு அவரை அறிந்த அனைவருக்குமே ஒரு பேரிழப்புத்தான்.

click me!