என்.எல்.சியில் மீண்டும் பாய்லர் வெடித்து விபத்து.. 5 பேர் உயிரிழப்பு... 11 பேர் கவலைக்கிடம்...!

By vinoth kumarFirst Published Jul 1, 2020, 12:11 PM IST
Highlights

நெய்வேலியில் என்.எல்.சி 2வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 11 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நெய்வேலியில் என்.எல்.சி 2வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 11 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதில், 2-ம் அனல் மின்நிலையத்தில் 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு யூனிட்டிலும் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 

இந்நிலையில், 5வது யூனிட்டில் பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது 18க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில், 5 பேர்  உயிரிழந்துள்ளதாகவும்,  11 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் சிக்கிய 2 பேரை தேடும் பணி தீவிரமாக தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், படுகாயமடைந்த 17 பேரையும் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் விபத்தில் சிக்கியுள்ள ஊழியர்களை மீட்கும் பணியிலும், தீயை அணைக்கும் பணியையும் முடுக்கிவிட்டுள்ளனர். சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த ஏப்ரல் 8ம் தேதி பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!