லாரி மீது கார் பயங்கர மோதல்... தாய், மகன் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!

By vinoth kumarFirst Published Jun 9, 2019, 11:01 AM IST
Highlights

கடலூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தாய், மகன் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

கடலூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தாய், மகன் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

சேலம் குகை பி.ஜி.ஆர். லைன் ரோடு பகுதியை சேர்ந்தவர் அப்துல்சலிம் மகன் அகமதுசரீப் (26). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கார் கம்பெனியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய தாய் சிராஜ்நிஷா (50), தங்கை அசீராபி (22), தம்பி சுமயா (23). இந்த நிலையில் அகமது சரீப் தனது குடும்பத்துடன் நாகூர் தர்காவிற்கு செல்ல திட்டமிட்டார். அதன்படி, நேற்று முன்தினம் அகமதுசரீப், சுமயா, சிராஜ்நிஷா, அசீராபி மற்றும் உறவினர் சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த கவுஸ்மைதீன் மனைவி நஜிமாபானு (56) ஆகியோர் ஒரு காரில் புறப்பட்டனர். காரை அகமது சரீப் ஓட்டிச் சென்றார். 

நாகூர் சென்ற அவர்கள் அங்குள்ள தர்காவில் தொழுகை நடத்தினர். பின்னர் இரவு அங்கிருந்து புறப்பட்டனர். அந்த கார் நள்ளிரவு 1 மணிக்கு கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே வந்து கொண்டிருந்த போது முன்னாள் சென்றுக்கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

 

இதில், அகமது ஷெரீப், ஷிராஜ் நிஷா, நசீமா பானு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அசீராபி, சுமயா ஆகிய 2 பேரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த 3 பேர் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!