
கோவை மாவட்டம், ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த ஜோசப், சல்மான் ஆகிய இரு மாணவர்களும் நள்ளிரவு 2 மணியளவில் டீ குடிக்க மலுமிச்சம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அதிவேகமாக சென்ற இளைஞர்கள், கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர தடுப்பின் மீது மோதி விழுந்தனர். இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்து வந்த மதுக்கரை போலீசார், உயிரிழந்த இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர், தொடர்ந்து விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.