மீண்டும் டெங்கு பீதி..! 6 வயது சிறுவன் பரிதாப பலி..!

By Manikandan S R SFirst Published Jan 20, 2020, 4:33 PM IST
Highlights

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருக்கிறது அவரபாளையம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ஜியாவுதீன். இவரது மனைவி ஜக்கிதான். இந்த தம்பதியினருக்கு 4 குழந்தைகள். இவர்களின் மகள் சுமாபர்வீன் (7) மற்றும் மகன் முகமது அல்தாஸ் (6) ஆகிய இருவருக்கும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதனால் இருவரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றோர் அழைத்து சென்றனர். எனினும் காய்ச்சல் குறையாமல் இருந்துள்ளது.

இதன்காரணமாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் இரு குழந்தைகளுக்கும் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சிறுவன் முகமது அல்தாசுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுவன் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த முகமது அல்தாஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவனின் உடலை பார்த்து பெற்றோரும் உறவினர்களும் கதறி துடித்தனர்.

இதையடுத்து சுகாதாரத்துறை சார்பாக சிறுவனின் வீடு அமைந்திருக்கும் கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அதில் அங்கு மேலும் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக திருப்பூர் மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர். டெங்கு காய்ச்சலால் 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read: அதிகாலையில் கோர விபத்து..! கார்-அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதிய ஆம்னி பஸ்..! 4 பேர் உடல் நசுங்கி பலி..!

click me!