TASMAC: டாஸ்மாக் கடை நேரத்தை மாற்றியது ஏன்? தமிழக அரசிடம் விளக்கம் கேட்கும் சென்னை ஹைகோர்ட்..!

By vinoth kumarFirst Published Dec 8, 2021, 1:31 PM IST
Highlights

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து, டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் தாக்கல் செய்துள்ள மனுவில், முன்னறிவிப்பின்றி தன்னிச்சையாக நேரம் மாற்றப்பட்டு உள்ளதாகவும், இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

டாஸ்மாக் மதுபான கடை நேரத்தை மாற்றியது குறித்து தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்படும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை என இருப்பதைப் பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என மாற்றியமைக்க வேண்டும் என்ற டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரின் வேண்டுகோளை உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஏற்றுக்கொண்ட அடிப்படையில், பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணிவரை கடைகளும், மதுக்கூடங்களும் செயல்பட வேண்டுமென மாற்றியமைக்கப்பட்டது. 

இந்த அறிவிப்பை டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் வெளியிட்ட முதல் நாளில் இருந்தே டாஸ்மாக் ஊழியர்களும், அது சார்ந்த சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒமிக்ரான் அச்சம் நிலவி வரும் நிலையில் நேரத்தை அதிகரித்ததும், இரவு 10 மணி வரை கடைகள் செயல்படும்போது கணக்கு முடிக்க மேலும் 1 மணி நேரம் கூடுதலாகக் கடையில் இருக்க வேண்டிய ஊழியர்கள் சமூக விரோதிகளால் தாக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறுவதாகவும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். 

இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து, டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் தாக்கல் செய்துள்ள மனுவில், முன்னறிவிப்பின்றி தன்னிச்சையாக நேரம் மாற்றப்பட்டு உள்ளதாகவும், இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,  டாஸ்மாக் கடை நேரத்தை மாற்றியது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த வழக்கு டிசம்பர் 18-ம் தேதி  ஒத்திவைக்கப்பட்டது.

click me!