அடுத்தடுத்து இருவர் பலி..! சென்னையை அலறவிடும் கொடூர கொரோனா..!

By Manikandan S R SFirst Published May 9, 2020, 8:46 AM IST
Highlights

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த சென்னையைச் சேர்ந்த 2 பேர் இன்று ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். இதன்மூலம் சென்னையில் இதுவரை 26 உயிர்களை கொரோனா வைரஸ் காவு வாங்கியிருக்கிறது.

இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொடிய வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுரவேகம் எடுத்திருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தினமும் 500ஐ கடந்திருக்கிறது. நேற்று ஒரே நாளில் 600 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.009 ஆக உயர்ந்திருக்கிறது.

இன்றைய நிலவரப்படி 1,605 பேர் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த சென்னையைச் சேர்ந்த 2 பேர் இன்று ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை 42 உயிர்களை கொரோனா வைரஸ் காவு வாங்கியிருக்கிறது. சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த 64 வயது பெண் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்துள்ளார்.  அதே போல வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 56 வயது பெண் ஒருவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பலியாகி இருக்கிறார். இதன்மூலம் தலைநகர் சென்னையில் இன்று 2 பேர் கொரோனாவிற்கு பலியாகி இருக்கின்றனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் 399 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது வரை  தலைநகரில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3,043 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!